சனி, 8 ஜூலை, 2017

இழிதொழில் ஒழி!

ஜுனியர் விகடன் (12.07.2017) வார இதழில் (ப.36-39)  வெளிவந்த 'இழிதொழில் ஒழி!' கட்டுரையின் ( http://www.vikatan.com/juniorvikatan/2017-jul-12/investigation/132653-special-story-about-manjal-drama.html ) எடிட் செய்யப்படாத முழுக் கட்டுரை இது.



கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்!


தோழர் ஜெயராணி மற்றும் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களின் ஜெயபீம் மன்றமும், நீலம் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த மஞ்சள் நாடக நிகழ்வு ஒரு உன்னத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 'சாதியை ஒழிப்போம்; கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்' என்னும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக பெருமளவில் அருந்ததியர் இயக்கங்கள் மற்றும் தலைவர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரச்சாரத்தில் தலித் இயக்கங்களும், கம்யூனிஸ்டு இயக்கங்களும்,முற்போக்கு சக்திகளும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியே வந்துள்ளனர். அண்மையில் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தோழர் திவ்யா உருவாக்கி வெளியிட்ட 'கக்கூஸ்' ஆவணப்படமும்  பொது வெளியில் கையால் மலம் அள்ளும் இழிவு குறித்து ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தது. இன்றைக்கு ஜெயபீம் மன்றமும், நீலம் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து 'கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்' என்னும் பிரச்சாரத்தினைத் தீவிரப்படுத்துவதோடு அதற்கு மூல காரணமான சாதியை ஒழிப்போம் என்று முழங்குகிறார்கள். இந்த முழக்கம்தான் தான் இந்த பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தைக் கவனப்படுத்துகிறது. இந்த நிகழ்விலும், இதனைத் தொடர்ந்தும் கையால் மலம் அள்ளும் இழிவு குறித்து தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளாலும், வெகுசன ஊடகங்களாலும் இந்த விவாதம் தொடர்கிறது. இந்த வேளையில், கையால் மலம் அள்ளும் இழிவு குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதின் விளைவே இந்த கட்டுரை. இந்த சமூகச் சிக்கல் குறித்து வேறொரு நேரத்தில் நான் எழுதி எந்த இதழ்களிலும் வெளியிடப்படாத சிறு கட்டுரைகளின் நீட்சியே இந்த கட்டுரை.


கையால் மலம் அள்ளும் அவலம் தொடரும் இந்த காலகட்டத்தில் சாதியமைப்பை முதன்மையான கூறாகக் கொண்ட இந்திய சமூகத்தை ஒரு மனிதநேயமற்ற சமூகம் என்று சொல்வது எந்த வகையிலும் மிகையானதல்ல. படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையைக் கொண்ட சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் பணியைத் தொடரும் வரையில் இந்திய பண்பாடு எந்த வகையிலும் ஒருவருக்குப் பெருமையைத்  தரப் போவதில்லை. அதனால்தான் அம்பேத்கர் 'சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' என்றார். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து விட்டால் அவன் ஒடுங்கியே கிடக்குமாறு இந்து மதம் இந்த சமூகத்தைப் பல படிநிலைத் தளைகளால் பிணைத்து வைத்திருக்கிறது. அந்த மதத்திற்குள்ளேயே அத்தளைகளிலிருந்து விட்டு விடுதலையாவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லாவண்ணம் அனைத்துக் கதவுகளையும் அடைத்து வைத்திருக்கிறது. இந்தியாவின் நில அமைப்பு முறை கூட சுதந்திரக் காற்றுப் புகாவண்ணம் சேரியென்றும், காலனியென்றும் சாதியின் அடிப்படையில் வாழிடங்களை நிறுவி பெரும் மக்கள் கூட்டத்தை வாழ்நாள்முழுக்கத் துன்பங்களில் உழன்றுத் தவிக்கும் வகையில் செய்திருக்கிறது.


சாதியின் பெயரால் இழைக்கப்படும் அநீதியால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் மிகவும் சுருங்கிப் போயுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகம் தம்முடைய அறிவையும், திறமையையும் பயன்படுத்தித் தமக்குப் பிடித்த தொழில்களைச் செய்துகொள்ள ஏதுவான சூழல் இல்லை. அரசும் இந்த சமுகத்திற்கு ஆதரவாகப் பல்வேறு நிதி ஆதாரங்களை ஏற்படுத்தியிருந்தாலும் அது அநீதியான சமூக அமைப்பில் சிறு அசைவையும் உண்டாக்கப் போதுமானதாக இல்லை. ஆளும் வர்க்கத்தின் நலன்கள் அடிமை வர்க்கத்தின் நலன்களை ஒருபோதும் பாதுகாக்காது என்பதே ஒவ்வொரு முறையும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் பறை அடித்தல், இழவு சொல்லுதல், சவக்குழி வெட்டுதல், செத்த மாட்டுத்தோல் உரித்தல், ஆண்டைச் சாதிகளிடம் பண்ணையடிமையாய் இருத்தல் போன்ற இழிவான தொழில்களைச் செய்யுமாறு  இந்த சமூகம் சபிக்கப்பட்டிருக்கிறது.


இந்த இழிதொழில்களில் மிகவும் அருவருக்கத்தக்க இழிதொழிலான மனித மலத்தை மனிதனே கையால் அள்ளும் கேவலமும் தொடருகிறது. உலகத்தின் எந்த மூலையிலும் நடந்திராத வன்கொடுமை, பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகும் இங்கு  தொடர்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு அம்பேத்கரின் போராட்டத்தால் உண்டான சிறுபலனைக் கூட அனுபவிக்காத  ஒரு மக்கள் கூட்டம் தலித் சமூகத்திலேயே உண்டு. அது நாடு முழுக்க மலம் அள்ளுவதையும் , சாக்கடை சுத்தம் செய்வதையும், வீதிகளைக் கூட்டுவதையும் தொழிலாகச் செய்து வரும் சாதிகள்தான். சமூகத்தின் எல்லா நிலைகளிலும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட (Completely Neglected) பங்கி, வால்மீகி, ரெல்லி, ஹெலால்கர் என்று அழைக்கப்படுகிற சாதிகள்தான் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சட்டங்களாலும், நலத்திட்டங்களாலும் குறைந்த அளவிலும் பயனை நுகர்ந்து பார்த்திராதவை. தமிழ்நாட்டின் சக்கிலியர்களும் அந்த வரிசையில் வைத்துப் பார்க்கக்கூடிய அவல நிலையில்தான் இருக்கிறார்கள். அயோத்திதாசப் பண்டிதரும்  இந்த இழிதொழிலைச் சக்கிலித்தொழில் என்ற 'தொனி'யிலேயே ஒவ்வொரு இடத்திலும் கையாண்டிருப்பார். கையில் வாளேந்திப் போராடிய மதுரைவீரனைத் தன்  அடையாளமாகக் கொண்ட அருந்ததியர் சமூகம் இன்றைக்குக் கையால் மனித மலத்தை அள்ளும் கேவலத்தைத் தன் அடையாளமாக ஏந்தி நிற்கிறது. உயிரைப் போர்க்கருவியாக்கிப் போராடித் தன் மண்ணைக் காக்க இன்னுயிர் ஈந்த குயிலி பிறந்த சமூகத்துப் பெண்கள் கையில் வீதி கூட்டும் விளக்குமாறுகளோடு திரிந்து உழன்று சொல்லொண்ணா நோய்களுக்குத் தங்கள் உயிரை இரையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.


பெரும்பாலும் வாழ்வாதாரம் சரியாக இல்லாத இக்கட்டான சூழலில் வாழும் ஏழை மக்கள் தங்கள் வாழ்வை நகர்த்துவதற்காகக் கிடைக்கிறத் தொழிலைச் செய்பவர்களாய் இருக்கிறார்கள். சக்கிலியர்கள் மட்டுமில்லாமல் இதர தலித் சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களும் இந்த இழிதொழில்களில் ஈடுபடுகின்றனர் என்பதையும் இவ்வேளையில் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வேறுபாடுகளின்றி எங்கெங்கு காணினும் வாழ்வாதாரம் ஏதுமில்லாத நெருக்கடிச் சூழல், ஒருவர் பிறந்த சாதி பங்கி, வால்மீகி, ரெல்லி, ஹெலால்கர், சக்கிலியர் என்று இருந்தால் மனித மலத்தை அள்ளும் இழிதொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஒருவர் பிறக்கும் சாதி முடிவு செய்கிறது. அதுவே பல தலைமுறைகளுக்கும் தொடருகிறது.

ஆண்கள் மலக்குழிகளுக்குள் இறங்கி சுத்தம் செய்வதிலும், பெண்கள் துப்புரவுப் பணி செய்வதிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக, வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெண்கள் உலர் கழிப்பிடங்களிலிருந்து மனித மலத்தைக் கூடைகளில் அள்ளித் தலையில் சுமந்து கொண்டுபோய் ஊருக்கு வெளியே கொட்டும் அருவருக்கத்தக்க வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 95% பெண்கள்தான்  இந்த இழிதொழில் என்னும் சுழலுக்குள் சிக்கித் தவிக்கின்றனர். பெண்களே பெரும் அவதிக்குள்ளாகும் வகையில் இந்தத் தொழில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது (By Design). மழைநாட்களில் மலம் அள்ளும் வேலைக்குச்   செல்லும் மக்கள் மலத்தை அள்ளிக் கூடையில் சுமந்து கொண்டு செல்லும் பொழுது கடும் மழை பெய்யத் தொடங்கவிட்டால், மழைநீரால் கூடை நிரம்பி அவர்கள் உடல் முழுக்க மலம் வழிந்தோடும். இதே வன்கொடுமையை  இன்றைக்கும் வட இந்தியாவின்  பல கிராமங்களில் பல பங்கி சமூகத்தினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் 'தோட்டியின் மகன் 'நாவல் எவ்வாறு தமிழ்நாட்டின் சக்கிலியர்கள் கேரளாவிலும் இந்த இழிதொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உயிர்பலியாக்கப்பட்டார்கள் என்பதைச்  சொல்லும். கேரளாவில் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் சக்கிலியர்கள் ஒவ்வொரு வருடமும் வைசூரி காய்ச்சலுக்கு கொத்துக்கொத்தாக சாகிறார்கள். அப்போது குறைந்து போகும் ஆட்களின் எண்ணிக்கையை ஈடுகட்டுவதற்காக திருநெல்வேலிப் பகுதிகளுக்கு வந்து தரகர்கள் மூலம் மலம் அள்ளும் வேலைக்கு ஆள்பிடித்துச் செல்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே இந்த ஆள்பிடிக்கும் வேலை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைக்கு கேரளாவிலிருக்கும் சக்கிலியர்கள் யாருமற்ற அனாதைகளாய், அவர்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளைத் தட்டி கேட்க ஆளில்லாமல் மொழி சிறுபான்மையருக்கான அங்கீகாரம்கூட இல்லாமல் அல்லல்படுகின்றனர். அவர்களை பட்டியலினமாக அங்கீகரித்து சாதி சான்றிதழ் கூட தருவதில்லை.

வழக்கம் போல இந்த வன்கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் தட்டிக் கழித்த அரசுகள், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இயற்றிய உப்புச் சப்பில்லாத சட்டங்களும் (1993ஆம் ஆண்டு சட்டம்) மற்றும் திட்டங்களும் (துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வுத் திட்டம்) எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. 2013ஆம் ஆண்டு வரை நீதிமன்றங்களின் கடுமையான கண்டனங்களும், உருட்டல், மிரட்டல்களும் கூட மத்திய, மாநில அரசுகளிடத்தில் எந்த விதமான அசைவையும் ஏற்படுத்தவில்லை. 6.9.2013ஆம் நாள் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட 2013ஆம் ஆண்டு சட்டம் சக மனிதர்களைக் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்துவதையும், மலக்குழிகளுக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்துவதையும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது. இதுவரை சட்டை செய்யாமல் இருந்த ரயில்வே துறையின் அலட்சியத்திற்கு இந்த சட்டம் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருக்கிறது. இதன் பிரிவுகள் ஓரளவு நம்பிக்கையைத் தருவதாக இருந்தாலும், நான்கு ஆண்டு காலம் கடந்தும் பெரிய பாதிப்பு எதையும் இந்த சட்டம் உண்டாக்கவில்லை என்றே சொல்லலாம். பிரதமரின் கனவுத் திட்டமான 'தூய்மை இந்தியா'விலும் (Swachh Bharat Mission) இந்தப் பணிகளைச் செய்யும் சமூகத்தின் அவலத்தைப் போக்கும் வழிமுறைகள் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்தியாவின் நகரப்பகுதிகளில் உள்ள உலர் கழிப்பிடங்களின் எண்ணிக்கை பற்றி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பத்து மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மட்டுமே அந்த விபரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பத்து மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மட்டுமேயுள்ள மொத்த உலர் கழிப்பிடங்களின் எண்ணிக்கை 3,44,603. 


வ.எண்  மாநிலம்/யூனியன் பிரதேசம்   
உலர் கழிப்பிடங்களின் எண்ணிக்கை 
1.
ஆந்திரப் பிரதேசம் 
65,117
2.
 சத்தீஸ்கர் 
4,391
3.
 கர்நாடகா 
24,468
4.
ஒடிசா 
25
5.
தமிழ்நாடு 
82,147
6.
தெலங்கானா 
1,20,187
7.
உத்தரப் பிரதேசம் 
21,459
8.
தத்ரா & நாகர் ஹவேலி 
Nil
9.
 
டாமன் & டையூ 
Nil
10.
 புதுதில்லி 
26,809
மொத்தம் 
3,44,603


இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள உலர் கழிப்பிடங்களின் எண்ணிக்கை பற்றி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மேற்கண்ட பத்து மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மட்டுமே அனுப்பப்பட்ட அந்த விபரங்களைப் பார்த்தால் உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே தங்கள் மாநிலங்களில் முறையே 1,55,178 மற்றும் 890 உலர்  கழிப்பிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டின் 12,618 ஊராட்சிகளில் ஒரு உலர் கழிப்பிடம் கூட இல்லையென்று தமிழ்நாடு அரசாங்கம் அளித்த இந்த விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆக இந்தியாவில்  உள்ள உலர் கழிப்பிடங்களின் மொத்த எண்ணிக்கை 5,00,671. 2013ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பிறகு 03.02.2015 அன்று இந்திய அளவில் நடந்த மாநில அமைச்சர்களின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட இந்த புள்ளிவிபரங்கள் மாநிலங்கள் எந்த அளவிற்கு இந்த பிரச்சினையில் அக்கறை செலுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது (2013ஆம் ஆண்டு சட்டம் நடைமுறைப்படுத்துவதில் மீதான மாநில அமைச்சர்களின் மாநாட்டு குறிப்புகள்) . ஆனால் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட குடும்பங்கள் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு - 2011, நாட்டின் நகர்ப்புறங்களில் 13.29 இலட்சம், கிராமப்புறங்களில் 12.77 இலட்சம் என நாட்டில் மொத்தம் 26.06 இலட்சம் உலர் கழிப்பிடங்கள் உள்ளதாக தெரிவித்தது.

தேசிய துப்புரவுப் பணியாளர் விடுவிப்பு மற்றும் மறுவாழ்வுத திட்டம் அமுல்படுத்தப்பட்ட 1993லிருந்து 2005 வரை மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள கையால் மலம் அள்ளும் தொழிலார்களின் எண்ணிக்கை 7.7 இலட்சம் என்று கணக்கிடப்பட்டது. இதில் 4.3 இலட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்றதாகச் சொல்லப்படுகிறது (ஆதாரம்: இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 2016 - 17 ஆண்டறிக்கை). கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1.18 இலட்சம் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு 79,454 தொழிலாளர்கள் பயன்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.(ஆதாரம்: தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையத்தின் 2015 - 16 ஆண்டறிக்கை). இந்த மக்களிடையே பணியாற்றும் அரசு சாரா நிறுவங்களின் கணக்கின்படி சுமார் மொத்தம் 13 இலட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் 2013ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு மனிதர்களை ஈடுபடுத்துவதை தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்த பிறகு மக்கள் கணக்கெடுப்பில் கூட இந்த சமூகத்தின் விவரங்கள் வராமல் பார்த்துக் கொள்வதிலேதான் அரசாங்கங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இந்த சட்டம் உலர் கழிப்பிடங்கள் மற்றும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் கணக்கெடுப்பை கட்டாயமாக்கியிருக்கிறது. ஆனால், மாநில அரசாங்கங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் இதை சரிவர செய்யவில்லை. முன்பு அறிவிக்கப்பட்ட 7.7 இலட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து இன்றைக்கு நகர்ப்புறங்களில் 4358 (தமிழ்நாட்டில் 363 பேர்) மற்றும்  கிராமப்புறங்களில் 9010 பேரையும் (தமிழ்நாட்டில் ஒருவர் கூட இல்லை) சேர்த்து நாட்டிலுள்ள கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 13,368 என்று சுருங்கிப் பொய் விட்டது (பார்க்க: http://mssurvey.nic.in/Private/Report/SurveyReportLocal.aspx). இந்த திடீர் ஆட்குறைப்புக்குக் காரணம் இவர்களை சுரண்டி வாழும் ஆண்டைகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு விடுவார்களென்ற அச்சம்தான். சாதிய ஆதிக்கத்தைக் கட்டிக்காக்கத் துடிக்குக் சக்திகளை இந்த குற்றங்களிலிருந்துத்  தப்பிக்க வைக்கத்தான்  இந்த இருட்டடிப்பும், கள்ள மவுனமும் என்பதை யாரும் மறைத்துவிட முடியாது.  இதற்கு மற்றுமொரு காரணமும் சொல்வதுண்டு. பொதுவாக துப்புரவுப் பணியாளர்களை கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என்னும் வகைக்குள் அடக்குவதில்லை. இது துப்புரவுப் பணி குறித்த அறியாமையால் ஏற்படும் சிக்கலாகும். தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களில் வட மாநிலங்களைப் போன்ற உலர் கழிப்பிடங்களை சுத்தம் செய்து கூடையில் அள்ளிக்கொண்டு ஊருக்கு வெளியே கொட்டும் முறை இல்லையென்று சொன்னாலும், துப்புரவுப் பணியிலும், மலக்குழிகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடும் ஒருவர் மனித மலத்தை அப்புறப்படுத்துவதை வசதியாய் மறந்து விடுகின்றனர்.

உலகின் மிகப்பெரும் ரயில்போக்குவரத்தை நம்முடைய இந்திய ரயில்வே துறை இயக்குகிறது. 13 இலட்சம் தொழிலாளர்களோடு உலகின் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாகப் பெயரெடுத்த இந்திய ரயில்வே துறைதான் நம் நாட்டில் அதிகமாக மலம் அள்ளும் தொழிலாளர்களையும் கொண்ட நிறுவனமென்று தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையம் சொல்லுகிறது (ஆதாரம்: தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையத்தின் 2015 - 16 ஆண்டறிக்கை). ஒரு நாளைக்கு 2.3 கோடி பேரும், ஆண்டுக்கு 810 கோடி பேரும் பயணம் செய்யும் இந்திய ரயில்களில் தினந்தோறும் சுமார் 4.5 இலட்சம் லிட்டர் மனித திரவக் கழிவுகளையும், சுமார் 10,000 மெட்ரிக் டன் குப்பைகளையும் (திடக்கழிவு) அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக மனித மலத்தை மனிதனே அப்புறப்படுத்தும் கேவலம் எந்த ஒரு ரயில் நிலையங்களிலும் எளிதாகக் காணக்கிடைக்கும் காட்சிதான். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களில், துப்புரவுப் பணியாளர்கள் போராட்ட இயக்கத்தின் (Safai Karmachari Andolan) சார்பில் அதன் தலைவர்  பெஜவாடா வில்சன் அவர்களால்  உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ((W.P. (Civil) No.583 of 2003) 27.03.2014 அன்று அளித்த தீர்ப்பின்படி 1993ஆம் ஆண்டிலிருந்து மலக்குழிகளுக்குள் இறங்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற உத்தரவும் குறைந்த அளவுகூட அமுல்படுத்தப்படவில்லை.

இந்த கொடுமைகளினும் உச்சபட்சம் என்னவெனில், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும், கையால் மலம் அள்ளும் இழிவுநிலை தொடர்பான அனைத்துச் சிக்கல்களையும் கண்காணிக்கவும் தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையம் 12.08.1994 அன்று உருவாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டோடு இந்த ஆணையம் தன்னுடைய சட்ட ரீதியான அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து, இன்றைய தேதிக்கு ஆணையமாக பெயரளவிற்கு மாத்திரமே இருக்கிறது. தேசிய மனித உரிமை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆணையங்களைப் போல தவறு செய்தவர்களிடமிருந்து அறிக்கைகளைக் கோரா முடியாது. தவறிழைக்கும் நிறுவனங்களை, அதிகாரிகளைக் கேள்வி கேட்க முடியாது. அவர்களிடமிருந்து மற்ற ஆணையங்களைப் போல (சிவில் நீதிமன்றத்திற்கு இணையான) சாட்சியங்கள் கோரவோ, உறுதிமொழிப் பத்திரங்களைப் பெறவோ அதிகாரங்கள் இல்லாத அலங்கார அமைப்பாக இருக்கிறது.  குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட தேசிய மனித உரிமை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு இன்னும் கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்னும் கோரிக்கைகள் வைக்கப்படும் நேரத்தில், தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையம் குறைந்த பட்ச அதிகாரங்கள் இருப்பதை இந்த ஆணையமே மிகவும் வேதனையோடு தெரிவித்திருப்பதுதான் காலக்கொடுமை. மற்ற ஆணையங்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்றால், தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையம் ரப்பர் பாம்பு. ரப்பர் பாம்பின் பூச்சாணடிக்குப் பயப்பட இங்கு தவறு செய்பவர்களெல்லாம் குழந்தைகளா என்ன?   (ஆதாரம்: தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையத்தின் 2015 - 16 ஆண்டறிக்கை).

அரசின் கொள்கைகள், வளர்ச்சித் திட்டங்கள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைய வேண்டும். அந்த மாற்றம் ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை உரிமைகளை நுகர்வதில் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமான முறையில் வாழ வழிவகுப்பதாக இருக்க வேண்டும். அந்த மாற்றம் கண்ணுக்கெட்டும் தூரம் காணக் கிடைக்கவில்லை என்பதே இன்றைய யதார்த்தம். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்படும், அதன் மூலம் திறந்தவெளி கழிப்பிடங்களை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது நண்பரும், துப்புரவுப் பணியாளர்கள் போராட்ட இயக்கத்தின் (Safai Karmachari Andolan) தலைவருமான பெஜவாடா வில்சன் அவர்கள் அரசாங்கத்தை நோக்கி 
 '12 கோடி கழிப்பறைகளால் நிரம்பும் கழிவைச் சுத்தம் செய்ய என்ன
கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது? சிறிய குழாயைக் கூட சரியாகப் பொருத்த
வக்கில்லாத அரசுத்துறைகளும், ஊராட்சி, நகராட்சி மன்றங்களும் என்ன
தொழில்நுட்பத்தைக் கையாளப் போகிறீர்கள்?'

என்று கேட்டார். இந்த அறிவிப்பு இன்னும் அதிகமாக தலித் மக்களை இந்த இழிதொழிலில் ஈடுபடவே  வழிவகுக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். அதற்கு மாறாக, இந்த இழிதொழிலில் மாட்டிக்கொண்டு இன்னலுறும் பெண்களை, அம்பேத்கரின் மனுநீதி எரிப்புப் போராட்டத்தைப் போல அவர்கள் மலம் சுமக்கும் கூடைகளை எரிக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லத் தூண்டுகிறார். 

மேற்கண்ட நிலைமைத் தெரிவிக்கும் கசப்பான உண்மை என்னவென்றால், துப்புரவுப் பணியைச் சட்டங்களாலும், திட்டங்களாலும் மட்டுமே  ஒழித்து விட முடியாது. துப்புரவுப் பணி சாதியமைப்பு முறையோடு தொடர்புடையது. சாதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த பல்வேறு குலத்தொழில் முறைகளில் காலத்தின் மாற்றங்களால் இன்றைக்குத் தளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பல குலத்தொழில்களை நவீன இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள் பறித்துக் கொண்டு போயிருக்கின்றன. சக்கிலியர்களிடமிருந்து செருப்பு உருவாக்கும் தொழிலையும், ஆசாரிகளிடமிருந்து கருவிகள் உருவாக்கும் தொழிலையும், நெசவாளர்களிடமிருந்து ஆடைகள் உருவாக்கும் தொழிலையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். எது அசுத்தம் குறைந்து இருக்கிறதோ, எதில் பணம் அதிகம் கொழிக்கிறதோ அந்தத் தொழில்களை முதலாளிகள் பறித்துக்கொண்டு போய்  விட்டனர். எது அசுத்தம் நிறைந்த இழிதொழிலோ அதனை ஒடுக்கப்பட்ட சாதிகளின் தலையில் கட்டி விட்டனர். இன்னும் அதைத் தொடர்ந்து செய்யுமாறு துன்புறுத்துகின்றனர். அப்படித்தான் துப்புரவுப் பணியும் அருந்ததியர் சமூகத்தின் குலத்தொழிலைப் போல அதைத் தொடர்ந்து செய்யுமாறு அவர்களைப் பழக்கியிருக்கின்றனர்.


குலத்தொழில்கள் வரலாற்றின் அடிப்படையில் பார்த்தாலும் துப்புரவுப் பணி அருந்ததியர் சமூகத்தின் குலத்தொழில் கிடையாது. தோல் தொடர்பான பொருட்களைத் தயார் செய்யும் சமூகமாகத்தான் அருந்ததியர் சமூகம் இருந்து வந்திருக்கிறது. பூமணியின் 'பிறகு' நாவலின் நாயகப் பாத்திரமான அழகிரிப் பகடை தோல் பொருட்கள் தொடர்பான பணிகளைச் செய்வதற்கே துரைச்சாமிபுரத்திலிருந்து மணலூத்துக்கு அழைத்து வரப்படுகிறார். நாவலில் காட்சிப்படுத்தப்படும்  சக்கிலிகுடி பகடைகள் பெரும்பான்மையினர் விவசாயக்கூலித்  தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். நாவலின் ஓரிடத்தில் மட்டும் ஊர்ப்புறங்களிலிருந்த சக்கிலியர்கள் நகரத்திற்குக் குடிபெயர்தலையும், அங்கு துப்புரவு பணிகளில் ஈடுபடுவதையும் சொல்லியிருப்பார். அதுவும் கோவில்பட்டி நகரத்திற்கு இடம்பெயர்ந்த சக்கிலியர்கள் வீதிகளைக் கூட்டுவதை ஊர்ப்புறங்களிலிருந்த சக்கிலியர்கள் ஏளனமாகவும், இழிவாகவும் பார்த்தார்கள் என்பதைப் போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இது நாவலில் வரும் ஒரு காட்சியாக, புனைவாக இருந்தாலும் இதுதான் வரலாற்று உண்மை. பிறகு எவ்வாறு இழிதொழிலான மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுந்தொழிலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்னும் கேள்வி எழுகிறது. ஆங்கிலேயர்களின் வருகையின்போது இருந்த நிலவுடைமையின் இறுதிக்காலத்திற்கும், நவீனமயமாக்கல் மற்றும் நகரமயமாக்களின் துவக்க காலத்திற்கும் இடையிலான வரலாற்றை இந்திய சாதியமைப்பு இயங்குமுறையின் அடைப்படையிலும், சமூகவியல் அடிப்படையிலும் நுண்மையாக ஆராய்ந்தால் மட்டுமே அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்.



எந்த சமூகம் சாதியமைப்பிற்கும், அநீதியான இந்துத்துவத்திற்கும் எதிராக சமரசமில்லாமல் கடுமையாகப் போரிடுகிறதோ அந்த சமூகம் எளிதில் மீள முடியாதபடி மிகவும் மோசமான இழிநிலைக்கு ஒடுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் மோசமான இழிநிலை என்பது ஒரு சமூகத்தில் மிகவும் இழிவாகக் கருதப்படும் தொழிலைச் செய்யும்படி துன்புறுத்தப்பட்டு எதிர்காலங்களில் அவர்களே அதனை மனமுவந்து ஏற்று நடக்கும் நிலைக்குத் தள்ளுவதாகும். இதுதான் தோல் தொடர்பானத் தொழிலைச் செய்து வந்த அருந்தத்தியர்கள் துப்புரவுப் பணியையும், மலம் அள்ளும் கேவலத்தையும் தொடர்ந்து செய்து வருவதற்கான உண்மைக் காரணமாகும். விவசாயம் சார்ந்த கமலை, பரி போன்ற தோல் பொருட்களைத் தயாரிக்கும் ஊரகத் தொழிலைச் செய்யும் சமூகம் (Rural Artisans) இன்று நகர்ப்புறங்களில் சாக்கடை அள்ளும் சமூகமாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் சாதியமைப்பு முறையும், ஏகாதிபத்திய சுரண்டலும், அதற்கு எதிராக இந்த சமூகம் முன்னெடுத்த மிகத் தீவிரமான போராட்டங்களேயாகும்.


நம் நாட்டின் இடைக்கால வரலாறு என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண் சமூகமாக இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. நம் நாட்டில் ஆதிகாலந்தொட்டு நகரங்கள் இருந்து வந்தாலும், நகரமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டது ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகுதான். இதைத்தான் கிராமப்புற சமுதாயத்திலிருந்து நகர்ப்புற சமுதாயமாக மாறியதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிக்கின்றனர். கிராமப்புற சமுதாயத்திலிருந்து நகர்ப்புற சமுதாயமாக மாறிய இந்த வரலாற்று மாற்றத்தை அருந்ததியர்கள் வரலாற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் பொழுதுதான் அருந்ததியர் சமூகத்தின் இன்றைய மிக மோசமான வாழ்வாதார நிலைக்கான காரணங்களைப் புரிந்து கொள்ள முடியும். மதுரை வீரன், குயிலி, ஒண்டி வீரன், பொட்டிப் பகடை, கந்தன் பகடை, முத்தன் பகடை முதலானோர் வீழ்த்தப்பட்ட வரலாற்றையும் மேற்கண்டவற்றோடு இணைத்துப் பார்க்கும் பொழுது ஏகாதிபத்தியத்திற்கும், சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான போரில் தோற்கடிக்கப்பட்டு, வரலாறு மறைக்கப்பட்டு, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு இன்றைய இழிநிலைக்குத் தள்ளப்பட்ட சூழல் வெட்ட வெளிச்சத்திற்கு வரும். ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய பல சமூகங்களுக்கு நேராத வீழ்ச்சி காலனியாதிக்கம், சாதியாதிக்கம் என்னும் அன்றையக் காலகட்டத்தின் இரண்டு கொடூர ஒடுக்குமுறையை எதிர்த்து சமரசமில்லாமல் போராடியதின் விளைவு மீண்டெழ முடியாத வீழ்ச்சிக்குத் தள்ளப்பட்டனர். பங்கி மற்றும் வால்மீகி சமூகத்தினரின் வீழ்ச்சிக்கும் இதே போன்ற வரலாற்றுக் காரணங்கள் உண்டு. ஒடுக்கியவர்கள்  ஒரே கூட்டம் எனும் பொழுது ஒடுக்கப்பட்ட விதமும், ஒடுக்கப்பட்டவர்களின் நிலையும் ஒன்றாக அமைந்ததில் விசித்திரம் ஏதுமில்லை.

 நாகரிகத்தின் முன்னோடி, பழம்பெருமை வாய்ந்த தொன்மைக் கலாச்சாரம் என்றெல்லாம் பீற்றிக்கொள்கிற இந்தியத் திருநாட்டின் உண்மை நிலை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அதுவும் இந்த கேடுகெட்ட கேவலத்தை ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவே செய்யுமாறு கட்டமைக்கப்பட்ட சமூகம் எப்படி வளர்ச்சியடைந்த சமூகமாக மாறும் என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. அவர்கள் ஓர் அடையாளத்தில் அணிதிரள வேண்டியதையும், அமைப்பாவதன் அவசியத்தையும், உரிமைகளை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும், துப்புரவுப் பணிகள், சுடுகாட்டுப் பணிகள் போன்றவை மனித மாண்பை முற்றிலும் மறுதலிக்கிறது என்பதையும், அதிலிருந்து மீளவேண்டிய தேவையையும் வலியுறுத்த வேண்டும். அந்த இழிதொழில்களிலிருந்து விடுபட வேண்டுமென்பதே நமது இலக்கு என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். அம்பேத்கர் விடுத்த அதே அறைகூவலை அவர் மறைந்த அறுபதாண்டுகளுக்குப் பிறகும் விடுக்க வேண்டிய துயரமான நிலையில்தான் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறது.


இப்போது நம் முன்னால் இருக்கும் சிக்கல் 'எப்படி இதிலிருந்து விடுபடுவது?' என்பதுதான். எல்லோரும் சொல்வதைப்போல இந்த தொழிலை நவீனமயப்படுத்துவதும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதும் தீர்வாகுமா? கையுறை மாட்டிக்கொண்டு குப்பைகளை அள்ளுவதாலும், ஆக்சிஜென் சிலிண்டர் பொருத்திக்கொண்டு மலக்குழிகளைச் சுத்தம் செய்வதாலும்  இழிவுநிலை நீங்கி விடுமா?எந்தவொரு பணிப் பாதுகாப்பும் இல்லாத நிலையிலேயே, ஒப்பந்தப் பணியாளர்களாகக் கூட செல்ல தயாராக இருக்கும் துப்புரவுப் பணியாளர்களின் இளந்தலைமுறையை, அவர்களின் பணிகளை நிரந்தரப்படுத்தி அவர்களுக்குத் தேவையான பணிப்பாதுகாப்புகளைச் செய்வது இந்த இழிதொழிலை நோக்கி அடுத்த தலைமுறையை மேலும் ஈர்க்காதா? நாட்டிலுள்ள உலர் கழிப்பிடங்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டு நவீன கழிப்பறைகளாக ஆகிவிட்டால் நாற்றம் போய் விடுமா? இந்த துறையை நவீனமாக்குகிற வேலைகளை அரசாங்கம் செய்யட்டும். இந்த பணியை உதறித்  தள்ளுவதும், மாற்றுத் தொழிலை மேற்கொள்வதும் உடனடித் தேவையாகும். அதை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வழமையான தொழிற்சங்கங்களைப் போல தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக மட்டும் இல்லாமல், எதிர்காலத் தலைமுறை இந்தப் பணியில் சேர்ந்து விடாமல் தடுப்பதே சங்கங்களின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். அவர்களை  மாற்று வாழ்வாதாரங்களை நோக்கி திசை திருப்பும் கடமை அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் உண்டு. ஏற்கனவே இந்தப் பணியில் இருக்கும் தொழிலாளர்கள் மாண்போடு பணி செய்யும் வகையிலான உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டங்களை நடத்தும் அதே வேளையில், தொடர்ந்து அடுத்த தலைமுறை இந்த இழிதொழிலில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்பதையும் நாம் உணர வேண்டும். கையால் மலம் அள்ளும் கேவலத்தை ஊக்கப்படுத்தக் கூடாது என்னும் எண்ணத்தை ஏற்று நடைமுறைப்படுத்தும் வகையில் கிராம மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளிலும், குறிப்பாக வணிக நிறுவனங்களிடத்திலும் என பொது  சமூகத்திடம் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அனைத்து இயக்கங்களும் இதனை ஒரு வேலைத் திட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக விரைவாகவும் நடைமுறைப் படுத்திட வேண்டும்.

துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு பழங்குடியினருக்கு இருப்பதைப் போல உண்டு உறைவிடப்பள்ளிகளும், கல்லூரிகளும் (Residential Schools and Colleges) தொடங்கப்பட்டு இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். கல்விபெறுகிற சூழல் அமைந்து விட்டால் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இன்றைக்கு நடைமுறையில் இருக்கிற 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் நகரங்களிலியே தேவையான நிலங்களை கையகப்படுத்தி அனைவரையும் சொந்த வீட்டு உரிமையாளர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பை அரசு ஏற்று செய்யுமாறு இயக்கங்களும், தொழிலாளர் சங்கங்களும் வலியுறுத்த வேண்டும். இதைப்போன்ற நல்ல செயல் திட்டங்களை உருவாக்கி  அரசிடமும், சமூகத்திலும் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து அவற்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாகப் பல  ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வேண்டும். சாதியமைப்பு எப்படி பல்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளதோ, அதைப்போல சாதி ஒழிப்பு என்பதும் பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. சாதி ஒழிப்பு களம் என்பது பரந்துபட்டது என்பதால் சாதி ஒழிப்பு என்பது  நீண்ட நெடிய போராட்டம் என்பார்கள். சாதி ஒழிப்பில் நாட்டமுள்ள பெரும்பாலானோர் கூட சாதியை அவ்வளவு எளிதில்  ஒழிக்க முடியாது என்றே நம்புவார்கள். ஆனால் வரலாற்றின் வெவ்வேறு காலக்கட்டங்களில் சாதிக்கெதிராக தொடுக்கப்படும் போராட்டங்கள் தோல்விகளையும், வெற்றிகளையும் மாறி மாறி பெற்றிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படிப் போராடி அடைந்த வெற்றிகளையும், தோல்விகளிலிருந்து பெற்ற  படிப்பினைகளையும் ஆராய வேண்டும். அந்த வழியில் புத்தர், பூலே, பெரியார், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்கள் அவர்கள் போராடி அடைந்த வெற்றிகளையும், தோல்விகளிலிருந்து பெற்ற  படிப்பினைகளையும் நமக்கு வழங்கி  சென்றிருக்கிறார்கள்.  அந்த பலத்திலேதான் இன்னும் வலிமையாக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் ஆயுட்காலங்களில் அவர்கள் அநீதியின் அடிக்கட்டுமானமாகத் திகழும் சாதிக்கு எதிராக சாதித்த சாதனைகளைப் போல இந்த தலைமுறைக்கும் தம் ஆயுட்காலத்திலேயே சாதியமைப்பை, அதன் பல்வேறு இழைகளில் சிலவற்றைத் தகர்க்கச் செய்யும் நல்லதொரு வாய்ப்பு கையால் மலம் அள்ளும் இந்த கேவலத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் கிடைத்திருக்கிறது.  வாருங்கள்! சாதியை ஒழிப்பதற்கான முன் நிபந்தனையாக கையால் மலம் அள்ளும் இந்த கேவலத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவோம்.

(கட்டுரையில் உள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள்).

கருத்துகள் இல்லை: