ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் என்னும் மாமனிதன் - ச.தமிழ்ச்செல்வன்

வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் 
என்னும் மாமனிதன்
- ச.தமிழ்ச்செல்வன்


srv1
’அம்பேத்கரைப்படித்தேன் ஐ.ஏ.எஸ் ஆனேன் ’என்று பத்திரிகைகளில் பேட்டிகள் கொடுத்த மனிதர் வீரபாண்டியன் என்று மட்டுமே அறிந்திருந்த நான் இப்பயிலரங்கில் மாணவர்களோடு பேச வந்திருந்த அவரை நேரில் சந்திக்கும் பேறு பெற்றேன்.என் மகன் வயதை ஒத்த ஓர் இளைஞர்.இவர் இப்படியான மனிதராக இருப்பார் என்று மனம் வரைந்து வைத்திருந்த சித்திரங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டார் வீரபாண்டி.அவர் பேசப்பேச ஒவ்வொரு சித்திரமாக அழிந்துகொண்டே வந்தது.

மதுரையில் ஒரு அருந்ததியர் சமூகக் குடும்பத்தில் துப்புரவுப்பணியாளர்களான பெற்றொருக்கு மகனாகப் பிறந்து ஐந்தாம் வகுப்புப்படித்த நாள் முதல் (11 வயது) தினசரி கூலி வேலைக்குப் போய்க்கொண்டே படித்த மாணவர்.சிறிய ஓட்டல்களில் துப்புரவுப்பணி,கொஞ்சம் வளர்ந்ததும் மாட்டுக்கறிக்கடையில் கசாப்பு வேலை,புரோட்டாக் கடைகளில் ராத்திரி ஷிப்ட் என்று என்ன வேலை கிடைத்தாலும் செய்து கொண்டே படித்தவர்.படிக்க வேண்டாய்யா ராசா வேலை மட்டும் பாரு என்று சதா சொல்லிக்கொண்டே இருந்த தாயின் அறியாக்குரலைப் புன்னகையோடு புறக்கணித்துப் படித்த மாணவர்.ராத்திரி வீட்டுப்பாடம் என்று படித்ததே இல்லை.பள்ளிக்கூடத்தில் கேட்கும் பாடம் மட்டும்தான்.ராப்பாடமே கிடையாது என்னும்போது ப்ளஸ் டூ மாணவர்களுக்குக் கிட்டும் எக்ஸ்ட்ரா ட்யூஷன் என்பதெல்லாம் கற்பனையே செய்ய வாய்ப்பில்லை.அவர்களுடைய காலனியில் இருந்த மதிமுக அலுவலகம,விடுதலைச் சிறுத்தைககள் அலுவலகம் போன்ற இடங்களில் கிடைத்த பத்திரிகைகள்,புத்தகங்களைப் படித்துப் பெற்ற பொது அறிவு இவற்றோடு ப்ளஸ் டூ வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவராக முதல்வரிடம் ஒரு லட்சரூபாய் பரிசு பெற்ற வெற்றி.ஆங்கிலம் ஒரு வார்த்தை கூடப் பேசத்தெரியாது.புரியாது.மதுரை மாநகராட்சிப் பள்ளிப் படிப்பு முடித்து தோழர்.தொல்.திருமாவளவன்,அகரம் பவுண்டேஷன் சென்னை ,மற்றும் சில திராவிடர் கழகத் தோழர்களின் உதவியோடு சென்னை லயோலா கல்லூரியில் சமூகவியல் பட்டம் பெற்று வீதி நாடகக்குழுக்க்களோடும் தொண்டு நிறுவனங்களோடும் தலித் அமைப்புகளின் போராட்டங்களோடும் சிலகாலம் கழித்து தன் ஐந்தாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.இது நாலு வரியில் சொல்லப்பட்ட கதைச்சுருக்கம்.

ஆனால் இந்த ஒவ்வொரு நாளையும் அவர் கடந்து வந்த கணங்களின் ரணங்கள் பற்றி அவர் சொல்லாமலே நம்மால் புரிந்து கொள்ள முடிந்ததில் கண்ணீர் பெருகியது.அவர் எனக்கு முன்னால் நின்று மாணவர்களோடு பேசிக்கொண்டே இருக்க நான் பின்னால் உட்கார்ந்து மாணவர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கண்களைக் கர்சீப்பால் துடைத்துக்கொண்டும் செருமிக்கொண்டும் பின் பக்கம் திரும்பிக்கொண்டுமாக அந்தப் பையனின் வார்த்தைகளில் விரிந்த வாழ்க்கையைச் செரிக்க முடியாமல் கண்ணீரால் என் குற்ற மனதைக் கழுவிக்கொண்டிருந்தேன்.ப்ளஸ் டூ படிக்கும்போது மதுரை அரவிந்த் மருத்துவமனையில் அம்மாவோடு கக்கூஸ் கழுவும் பணியில் இருந்தேன் என்று அவர் சொன்ன போது உடைந்துபோனேன். அவர் கக்கூஸ் கழுவிய அதே ஆண்டில் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த என் மகனை வண்டியில் அழைத்துக்கொண்டு திருநெல்வேலியில் சிறப்பு ட்யூஷனுக்கு அழைத்துப்போன பொறுப்புணர்ச்சி இப்போது பெரும் பாரமாக மனதை அழுத்தத்துவங்கியிருந்தது. என் இன்னொரு மகன் இப்படி கக்கூஸ் கழுவியபடி பாடம் படித்திருக்கிறான் என்கிற தகவல் கூடத்தெரியாமல் அல்லது தெரிந்துகொள்ள முயலக்கூட இல்லாமல் ஒரு அவமானகரமான வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட்டேனே.இத்தனை நாள் கழித்தும் இவ்வரிகளை எழுதும் இத்தருணத்திலும் கூடக் கண்ணீரைக் கட்டுப்படுத்திட முடியவில்லை. எங்கே போய் இப்பாவத்தை நாம் கழுவப்போகிறோம்? நாம் அறியாத இத்தேசத்தின் எத்தனை ஓரங்களில் நம் பிள்ளைகள் வீரபாண்டியனைப்போல ஏதோ ஒரு உடல் உழைப்புடனும் சாதியம் தரும் அவமானங்களோடும் பாடப்புத்தகங்களைக் கையில் பிடித்திருக்கப் போராடிக் கொண்டிருக்கின்றனரோ என்கிற எண்ணமே அவர் பேசிக்கொண்டிருந்தபோது என் மனதில் கண்ணீராய் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு வீரபாண்டி ஜெயித்து விட்டார்.இன்னும் எத்தனை எத்தனை......

நம் பள்ளிக்கூடங்களும் கல்விமுறையும் முக்கியம் முக்கியம் என்று வற்புறுத்தி நம் பிள்ளைகளைச் சித்ரவதை செய்யும் எதையும் எல்லாவற்றையும் நிராகரித்து அதே கல்விப்புலத்தில் தன் சொந்த சொந்த சொந்த உழைப்பால் மட்டுமே வென்று நாம் கட்டமைத்த கல்விசார்ந்த எல்லாம் பொய்பொய்பொய் என்று நிரூபித்த ரத்த சாட்சியாக வீரபாண்டியன் இச்சமூகத்தின் முன் கம்பீரமாக நிற்கிறார்.

சமீப ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் அதன் அங்கமாக எனக்கும் அவர்களின் வாழ்நிலை பற்றிச் சில நேரடி அனுபவங்களும் பார்வைகளும் உண்டு.என்றாலும் என் 55 வயது அனுபவத்தில் நான் சந்தித்த மனிதர்களிலேயே மகத்தானவராக வீரபாண்டியன் இன்று என் மனதில் அழுந்தக்கால் ஊன்றி நிற்கிறார்.காரணம் -அவரது இத்தகைய வாழ்க்கை – அதில் இன்று அவர் பெற்றுள்ள ஒரு வெற்றி - என்று மட்டும் கூற முடியாது.

தான் யார் ? தான் யாரின் பிரதிநிதி ? காலம் தன்னை ஏன் இப்படியாக வடிவமைத்திருக்கிறது? தன் வாழ்க்கை எதற்காக? தன் வாழ்வின் அர்த்தம் என்ன? நான் எதன் சாட்சியாக இங்கே நிற்கிறேன்? என்பது பற்றிய முழுமையான சுய பிரக்ஞையோடு வீரபாண்டியன் இருக்கிறார்.உலகத்தின் எந்தப் பெரும் ஞானியும் அடைய முடியாத தன்னை உணர்ந்த நிலை இது.அப்பா! அதிர்ந்து போனது.அதிர்ந்து கொண்டே இருக்கிறது மனது.எதையும் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவயப்பட்டு பேசிவிடுகிற ஆள்தான் நான்.ஆனாலும் வீரபாண்டியனை நான் சந்தித்தபின் அடைந்த மனநிலையை மேலே நான் கொட்டியுள்ள வார்த்தைகளால் முழுமையாகப் படம் பிடிக்க முடியவில்லை என்றே சொல்லுவேன்.

அவர் பேசி முடிக்கையில் தங்கை கே.வி.ஷைலஜா எழுந்து சென்று வீரபாண்டியனின் கையைப்பற்றிக்கொண்டு ( மாணவர்களை நோக்கி ) இந்தக்கை டேபிள் துடைத்தது இந்தக்கை கக்கூஸ் கழுவியது இந்தக்கை மாட்டுக்கறி வெட்டியது இனிமேல் இந்தக்கை அரசாங்கத்தின் கோப்புகளில் அர்த்தமுள்ள கையெழுத்தை இடப்போகிறது.எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்று சொன்னார்.அந்த நிமிடம் துளசிதாஸ் உள்ளிட்ட பலர் கண் கலங்கியதைக் கண்டேன். ஷைலஜாவின் அந்த dramatic finishing அன்று அவசியமானதாகவும் கச்சிதமாகவும் அமைந்தது.

அவர் விடைபெற்றுக்காரில் ஏறியபோது என் மனதில் ஓடிய வார்த்தைகள் “ உலகின் எந்த சக்தியாலும் வெல்ல முடியாத மனிதன் இவன்”
srv3
வாழ்வாரை வாழ்த்துகிற இந்த உலகம் வெற்றி பெற்றுவிட்ட வீரபாண்டியனை இனிப் போற்றத்தான் செய்யும்- ஒரு அளவுக்கு. நம் கவனம் (நம் என்பதில் இப்போது வீரபாண்டியனும் அடக்கம்) இன்னும் வெளிச்சத்துக்கு வராத ஆயிரமாயிரம் வீரபாண்டியன்களைத் தேடிக்கண்டுபிடித்துக் கை கொடுப்பதை நோக்கி இனியாவது திரும்ப வேண்டும்.

லிங்க் தேவைப்படுவோருக்கு:

http://satamilselvan.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF

சனி, 8 ஜூலை, 2017

இழிதொழில் ஒழி!

ஜுனியர் விகடன் (12.07.2017) வார இதழில் (ப.36-39)  வெளிவந்த 'இழிதொழில் ஒழி!' கட்டுரையின் ( http://www.vikatan.com/juniorvikatan/2017-jul-12/investigation/132653-special-story-about-manjal-drama.html ) எடிட் செய்யப்படாத முழுக் கட்டுரை இது.



கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்!


தோழர் ஜெயராணி மற்றும் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களின் ஜெயபீம் மன்றமும், நீலம் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த மஞ்சள் நாடக நிகழ்வு ஒரு உன்னத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 'சாதியை ஒழிப்போம்; கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்' என்னும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக பெருமளவில் அருந்ததியர் இயக்கங்கள் மற்றும் தலைவர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரச்சாரத்தில் தலித் இயக்கங்களும், கம்யூனிஸ்டு இயக்கங்களும்,முற்போக்கு சக்திகளும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியே வந்துள்ளனர். அண்மையில் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தோழர் திவ்யா உருவாக்கி வெளியிட்ட 'கக்கூஸ்' ஆவணப்படமும்  பொது வெளியில் கையால் மலம் அள்ளும் இழிவு குறித்து ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தது. இன்றைக்கு ஜெயபீம் மன்றமும், நீலம் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து 'கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்' என்னும் பிரச்சாரத்தினைத் தீவிரப்படுத்துவதோடு அதற்கு மூல காரணமான சாதியை ஒழிப்போம் என்று முழங்குகிறார்கள். இந்த முழக்கம்தான் தான் இந்த பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தைக் கவனப்படுத்துகிறது. இந்த நிகழ்விலும், இதனைத் தொடர்ந்தும் கையால் மலம் அள்ளும் இழிவு குறித்து தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளாலும், வெகுசன ஊடகங்களாலும் இந்த விவாதம் தொடர்கிறது. இந்த வேளையில், கையால் மலம் அள்ளும் இழிவு குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதின் விளைவே இந்த கட்டுரை. இந்த சமூகச் சிக்கல் குறித்து வேறொரு நேரத்தில் நான் எழுதி எந்த இதழ்களிலும் வெளியிடப்படாத சிறு கட்டுரைகளின் நீட்சியே இந்த கட்டுரை.


கையால் மலம் அள்ளும் அவலம் தொடரும் இந்த காலகட்டத்தில் சாதியமைப்பை முதன்மையான கூறாகக் கொண்ட இந்திய சமூகத்தை ஒரு மனிதநேயமற்ற சமூகம் என்று சொல்வது எந்த வகையிலும் மிகையானதல்ல. படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையைக் கொண்ட சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் பணியைத் தொடரும் வரையில் இந்திய பண்பாடு எந்த வகையிலும் ஒருவருக்குப் பெருமையைத்  தரப் போவதில்லை. அதனால்தான் அம்பேத்கர் 'சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' என்றார். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து விட்டால் அவன் ஒடுங்கியே கிடக்குமாறு இந்து மதம் இந்த சமூகத்தைப் பல படிநிலைத் தளைகளால் பிணைத்து வைத்திருக்கிறது. அந்த மதத்திற்குள்ளேயே அத்தளைகளிலிருந்து விட்டு விடுதலையாவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லாவண்ணம் அனைத்துக் கதவுகளையும் அடைத்து வைத்திருக்கிறது. இந்தியாவின் நில அமைப்பு முறை கூட சுதந்திரக் காற்றுப் புகாவண்ணம் சேரியென்றும், காலனியென்றும் சாதியின் அடிப்படையில் வாழிடங்களை நிறுவி பெரும் மக்கள் கூட்டத்தை வாழ்நாள்முழுக்கத் துன்பங்களில் உழன்றுத் தவிக்கும் வகையில் செய்திருக்கிறது.


சாதியின் பெயரால் இழைக்கப்படும் அநீதியால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் மிகவும் சுருங்கிப் போயுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகம் தம்முடைய அறிவையும், திறமையையும் பயன்படுத்தித் தமக்குப் பிடித்த தொழில்களைச் செய்துகொள்ள ஏதுவான சூழல் இல்லை. அரசும் இந்த சமுகத்திற்கு ஆதரவாகப் பல்வேறு நிதி ஆதாரங்களை ஏற்படுத்தியிருந்தாலும் அது அநீதியான சமூக அமைப்பில் சிறு அசைவையும் உண்டாக்கப் போதுமானதாக இல்லை. ஆளும் வர்க்கத்தின் நலன்கள் அடிமை வர்க்கத்தின் நலன்களை ஒருபோதும் பாதுகாக்காது என்பதே ஒவ்வொரு முறையும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் பறை அடித்தல், இழவு சொல்லுதல், சவக்குழி வெட்டுதல், செத்த மாட்டுத்தோல் உரித்தல், ஆண்டைச் சாதிகளிடம் பண்ணையடிமையாய் இருத்தல் போன்ற இழிவான தொழில்களைச் செய்யுமாறு  இந்த சமூகம் சபிக்கப்பட்டிருக்கிறது.


இந்த இழிதொழில்களில் மிகவும் அருவருக்கத்தக்க இழிதொழிலான மனித மலத்தை மனிதனே கையால் அள்ளும் கேவலமும் தொடருகிறது. உலகத்தின் எந்த மூலையிலும் நடந்திராத வன்கொடுமை, பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகும் இங்கு  தொடர்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு அம்பேத்கரின் போராட்டத்தால் உண்டான சிறுபலனைக் கூட அனுபவிக்காத  ஒரு மக்கள் கூட்டம் தலித் சமூகத்திலேயே உண்டு. அது நாடு முழுக்க மலம் அள்ளுவதையும் , சாக்கடை சுத்தம் செய்வதையும், வீதிகளைக் கூட்டுவதையும் தொழிலாகச் செய்து வரும் சாதிகள்தான். சமூகத்தின் எல்லா நிலைகளிலும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட (Completely Neglected) பங்கி, வால்மீகி, ரெல்லி, ஹெலால்கர் என்று அழைக்கப்படுகிற சாதிகள்தான் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சட்டங்களாலும், நலத்திட்டங்களாலும் குறைந்த அளவிலும் பயனை நுகர்ந்து பார்த்திராதவை. தமிழ்நாட்டின் சக்கிலியர்களும் அந்த வரிசையில் வைத்துப் பார்க்கக்கூடிய அவல நிலையில்தான் இருக்கிறார்கள். அயோத்திதாசப் பண்டிதரும்  இந்த இழிதொழிலைச் சக்கிலித்தொழில் என்ற 'தொனி'யிலேயே ஒவ்வொரு இடத்திலும் கையாண்டிருப்பார். கையில் வாளேந்திப் போராடிய மதுரைவீரனைத் தன்  அடையாளமாகக் கொண்ட அருந்ததியர் சமூகம் இன்றைக்குக் கையால் மனித மலத்தை அள்ளும் கேவலத்தைத் தன் அடையாளமாக ஏந்தி நிற்கிறது. உயிரைப் போர்க்கருவியாக்கிப் போராடித் தன் மண்ணைக் காக்க இன்னுயிர் ஈந்த குயிலி பிறந்த சமூகத்துப் பெண்கள் கையில் வீதி கூட்டும் விளக்குமாறுகளோடு திரிந்து உழன்று சொல்லொண்ணா நோய்களுக்குத் தங்கள் உயிரை இரையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.


பெரும்பாலும் வாழ்வாதாரம் சரியாக இல்லாத இக்கட்டான சூழலில் வாழும் ஏழை மக்கள் தங்கள் வாழ்வை நகர்த்துவதற்காகக் கிடைக்கிறத் தொழிலைச் செய்பவர்களாய் இருக்கிறார்கள். சக்கிலியர்கள் மட்டுமில்லாமல் இதர தலித் சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களும் இந்த இழிதொழில்களில் ஈடுபடுகின்றனர் என்பதையும் இவ்வேளையில் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வேறுபாடுகளின்றி எங்கெங்கு காணினும் வாழ்வாதாரம் ஏதுமில்லாத நெருக்கடிச் சூழல், ஒருவர் பிறந்த சாதி பங்கி, வால்மீகி, ரெல்லி, ஹெலால்கர், சக்கிலியர் என்று இருந்தால் மனித மலத்தை அள்ளும் இழிதொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஒருவர் பிறக்கும் சாதி முடிவு செய்கிறது. அதுவே பல தலைமுறைகளுக்கும் தொடருகிறது.

ஆண்கள் மலக்குழிகளுக்குள் இறங்கி சுத்தம் செய்வதிலும், பெண்கள் துப்புரவுப் பணி செய்வதிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக, வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெண்கள் உலர் கழிப்பிடங்களிலிருந்து மனித மலத்தைக் கூடைகளில் அள்ளித் தலையில் சுமந்து கொண்டுபோய் ஊருக்கு வெளியே கொட்டும் அருவருக்கத்தக்க வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 95% பெண்கள்தான்  இந்த இழிதொழில் என்னும் சுழலுக்குள் சிக்கித் தவிக்கின்றனர். பெண்களே பெரும் அவதிக்குள்ளாகும் வகையில் இந்தத் தொழில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது (By Design). மழைநாட்களில் மலம் அள்ளும் வேலைக்குச்   செல்லும் மக்கள் மலத்தை அள்ளிக் கூடையில் சுமந்து கொண்டு செல்லும் பொழுது கடும் மழை பெய்யத் தொடங்கவிட்டால், மழைநீரால் கூடை நிரம்பி அவர்கள் உடல் முழுக்க மலம் வழிந்தோடும். இதே வன்கொடுமையை  இன்றைக்கும் வட இந்தியாவின்  பல கிராமங்களில் பல பங்கி சமூகத்தினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் 'தோட்டியின் மகன் 'நாவல் எவ்வாறு தமிழ்நாட்டின் சக்கிலியர்கள் கேரளாவிலும் இந்த இழிதொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உயிர்பலியாக்கப்பட்டார்கள் என்பதைச்  சொல்லும். கேரளாவில் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் சக்கிலியர்கள் ஒவ்வொரு வருடமும் வைசூரி காய்ச்சலுக்கு கொத்துக்கொத்தாக சாகிறார்கள். அப்போது குறைந்து போகும் ஆட்களின் எண்ணிக்கையை ஈடுகட்டுவதற்காக திருநெல்வேலிப் பகுதிகளுக்கு வந்து தரகர்கள் மூலம் மலம் அள்ளும் வேலைக்கு ஆள்பிடித்துச் செல்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே இந்த ஆள்பிடிக்கும் வேலை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைக்கு கேரளாவிலிருக்கும் சக்கிலியர்கள் யாருமற்ற அனாதைகளாய், அவர்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளைத் தட்டி கேட்க ஆளில்லாமல் மொழி சிறுபான்மையருக்கான அங்கீகாரம்கூட இல்லாமல் அல்லல்படுகின்றனர். அவர்களை பட்டியலினமாக அங்கீகரித்து சாதி சான்றிதழ் கூட தருவதில்லை.

வழக்கம் போல இந்த வன்கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் தட்டிக் கழித்த அரசுகள், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இயற்றிய உப்புச் சப்பில்லாத சட்டங்களும் (1993ஆம் ஆண்டு சட்டம்) மற்றும் திட்டங்களும் (துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வுத் திட்டம்) எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. 2013ஆம் ஆண்டு வரை நீதிமன்றங்களின் கடுமையான கண்டனங்களும், உருட்டல், மிரட்டல்களும் கூட மத்திய, மாநில அரசுகளிடத்தில் எந்த விதமான அசைவையும் ஏற்படுத்தவில்லை. 6.9.2013ஆம் நாள் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட 2013ஆம் ஆண்டு சட்டம் சக மனிதர்களைக் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்துவதையும், மலக்குழிகளுக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்துவதையும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது. இதுவரை சட்டை செய்யாமல் இருந்த ரயில்வே துறையின் அலட்சியத்திற்கு இந்த சட்டம் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருக்கிறது. இதன் பிரிவுகள் ஓரளவு நம்பிக்கையைத் தருவதாக இருந்தாலும், நான்கு ஆண்டு காலம் கடந்தும் பெரிய பாதிப்பு எதையும் இந்த சட்டம் உண்டாக்கவில்லை என்றே சொல்லலாம். பிரதமரின் கனவுத் திட்டமான 'தூய்மை இந்தியா'விலும் (Swachh Bharat Mission) இந்தப் பணிகளைச் செய்யும் சமூகத்தின் அவலத்தைப் போக்கும் வழிமுறைகள் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்தியாவின் நகரப்பகுதிகளில் உள்ள உலர் கழிப்பிடங்களின் எண்ணிக்கை பற்றி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பத்து மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மட்டுமே அந்த விபரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பத்து மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மட்டுமேயுள்ள மொத்த உலர் கழிப்பிடங்களின் எண்ணிக்கை 3,44,603. 


வ.எண்  மாநிலம்/யூனியன் பிரதேசம்   
உலர் கழிப்பிடங்களின் எண்ணிக்கை 
1.
ஆந்திரப் பிரதேசம் 
65,117
2.
 சத்தீஸ்கர் 
4,391
3.
 கர்நாடகா 
24,468
4.
ஒடிசா 
25
5.
தமிழ்நாடு 
82,147
6.
தெலங்கானா 
1,20,187
7.
உத்தரப் பிரதேசம் 
21,459
8.
தத்ரா & நாகர் ஹவேலி 
Nil
9.
 
டாமன் & டையூ 
Nil
10.
 புதுதில்லி 
26,809
மொத்தம் 
3,44,603


இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள உலர் கழிப்பிடங்களின் எண்ணிக்கை பற்றி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மேற்கண்ட பத்து மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மட்டுமே அனுப்பப்பட்ட அந்த விபரங்களைப் பார்த்தால் உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே தங்கள் மாநிலங்களில் முறையே 1,55,178 மற்றும் 890 உலர்  கழிப்பிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டின் 12,618 ஊராட்சிகளில் ஒரு உலர் கழிப்பிடம் கூட இல்லையென்று தமிழ்நாடு அரசாங்கம் அளித்த இந்த விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆக இந்தியாவில்  உள்ள உலர் கழிப்பிடங்களின் மொத்த எண்ணிக்கை 5,00,671. 2013ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பிறகு 03.02.2015 அன்று இந்திய அளவில் நடந்த மாநில அமைச்சர்களின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட இந்த புள்ளிவிபரங்கள் மாநிலங்கள் எந்த அளவிற்கு இந்த பிரச்சினையில் அக்கறை செலுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது (2013ஆம் ஆண்டு சட்டம் நடைமுறைப்படுத்துவதில் மீதான மாநில அமைச்சர்களின் மாநாட்டு குறிப்புகள்) . ஆனால் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட குடும்பங்கள் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு - 2011, நாட்டின் நகர்ப்புறங்களில் 13.29 இலட்சம், கிராமப்புறங்களில் 12.77 இலட்சம் என நாட்டில் மொத்தம் 26.06 இலட்சம் உலர் கழிப்பிடங்கள் உள்ளதாக தெரிவித்தது.

தேசிய துப்புரவுப் பணியாளர் விடுவிப்பு மற்றும் மறுவாழ்வுத திட்டம் அமுல்படுத்தப்பட்ட 1993லிருந்து 2005 வரை மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள கையால் மலம் அள்ளும் தொழிலார்களின் எண்ணிக்கை 7.7 இலட்சம் என்று கணக்கிடப்பட்டது. இதில் 4.3 இலட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்றதாகச் சொல்லப்படுகிறது (ஆதாரம்: இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 2016 - 17 ஆண்டறிக்கை). கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1.18 இலட்சம் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு 79,454 தொழிலாளர்கள் பயன்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.(ஆதாரம்: தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையத்தின் 2015 - 16 ஆண்டறிக்கை). இந்த மக்களிடையே பணியாற்றும் அரசு சாரா நிறுவங்களின் கணக்கின்படி சுமார் மொத்தம் 13 இலட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் 2013ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு மனிதர்களை ஈடுபடுத்துவதை தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்த பிறகு மக்கள் கணக்கெடுப்பில் கூட இந்த சமூகத்தின் விவரங்கள் வராமல் பார்த்துக் கொள்வதிலேதான் அரசாங்கங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இந்த சட்டம் உலர் கழிப்பிடங்கள் மற்றும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் கணக்கெடுப்பை கட்டாயமாக்கியிருக்கிறது. ஆனால், மாநில அரசாங்கங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் இதை சரிவர செய்யவில்லை. முன்பு அறிவிக்கப்பட்ட 7.7 இலட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து இன்றைக்கு நகர்ப்புறங்களில் 4358 (தமிழ்நாட்டில் 363 பேர்) மற்றும்  கிராமப்புறங்களில் 9010 பேரையும் (தமிழ்நாட்டில் ஒருவர் கூட இல்லை) சேர்த்து நாட்டிலுள்ள கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 13,368 என்று சுருங்கிப் பொய் விட்டது (பார்க்க: http://mssurvey.nic.in/Private/Report/SurveyReportLocal.aspx). இந்த திடீர் ஆட்குறைப்புக்குக் காரணம் இவர்களை சுரண்டி வாழும் ஆண்டைகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு விடுவார்களென்ற அச்சம்தான். சாதிய ஆதிக்கத்தைக் கட்டிக்காக்கத் துடிக்குக் சக்திகளை இந்த குற்றங்களிலிருந்துத்  தப்பிக்க வைக்கத்தான்  இந்த இருட்டடிப்பும், கள்ள மவுனமும் என்பதை யாரும் மறைத்துவிட முடியாது.  இதற்கு மற்றுமொரு காரணமும் சொல்வதுண்டு. பொதுவாக துப்புரவுப் பணியாளர்களை கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என்னும் வகைக்குள் அடக்குவதில்லை. இது துப்புரவுப் பணி குறித்த அறியாமையால் ஏற்படும் சிக்கலாகும். தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களில் வட மாநிலங்களைப் போன்ற உலர் கழிப்பிடங்களை சுத்தம் செய்து கூடையில் அள்ளிக்கொண்டு ஊருக்கு வெளியே கொட்டும் முறை இல்லையென்று சொன்னாலும், துப்புரவுப் பணியிலும், மலக்குழிகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடும் ஒருவர் மனித மலத்தை அப்புறப்படுத்துவதை வசதியாய் மறந்து விடுகின்றனர்.

உலகின் மிகப்பெரும் ரயில்போக்குவரத்தை நம்முடைய இந்திய ரயில்வே துறை இயக்குகிறது. 13 இலட்சம் தொழிலாளர்களோடு உலகின் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாகப் பெயரெடுத்த இந்திய ரயில்வே துறைதான் நம் நாட்டில் அதிகமாக மலம் அள்ளும் தொழிலாளர்களையும் கொண்ட நிறுவனமென்று தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையம் சொல்லுகிறது (ஆதாரம்: தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையத்தின் 2015 - 16 ஆண்டறிக்கை). ஒரு நாளைக்கு 2.3 கோடி பேரும், ஆண்டுக்கு 810 கோடி பேரும் பயணம் செய்யும் இந்திய ரயில்களில் தினந்தோறும் சுமார் 4.5 இலட்சம் லிட்டர் மனித திரவக் கழிவுகளையும், சுமார் 10,000 மெட்ரிக் டன் குப்பைகளையும் (திடக்கழிவு) அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக மனித மலத்தை மனிதனே அப்புறப்படுத்தும் கேவலம் எந்த ஒரு ரயில் நிலையங்களிலும் எளிதாகக் காணக்கிடைக்கும் காட்சிதான். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களில், துப்புரவுப் பணியாளர்கள் போராட்ட இயக்கத்தின் (Safai Karmachari Andolan) சார்பில் அதன் தலைவர்  பெஜவாடா வில்சன் அவர்களால்  உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ((W.P. (Civil) No.583 of 2003) 27.03.2014 அன்று அளித்த தீர்ப்பின்படி 1993ஆம் ஆண்டிலிருந்து மலக்குழிகளுக்குள் இறங்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற உத்தரவும் குறைந்த அளவுகூட அமுல்படுத்தப்படவில்லை.

இந்த கொடுமைகளினும் உச்சபட்சம் என்னவெனில், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும், கையால் மலம் அள்ளும் இழிவுநிலை தொடர்பான அனைத்துச் சிக்கல்களையும் கண்காணிக்கவும் தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையம் 12.08.1994 அன்று உருவாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டோடு இந்த ஆணையம் தன்னுடைய சட்ட ரீதியான அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து, இன்றைய தேதிக்கு ஆணையமாக பெயரளவிற்கு மாத்திரமே இருக்கிறது. தேசிய மனித உரிமை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆணையங்களைப் போல தவறு செய்தவர்களிடமிருந்து அறிக்கைகளைக் கோரா முடியாது. தவறிழைக்கும் நிறுவனங்களை, அதிகாரிகளைக் கேள்வி கேட்க முடியாது. அவர்களிடமிருந்து மற்ற ஆணையங்களைப் போல (சிவில் நீதிமன்றத்திற்கு இணையான) சாட்சியங்கள் கோரவோ, உறுதிமொழிப் பத்திரங்களைப் பெறவோ அதிகாரங்கள் இல்லாத அலங்கார அமைப்பாக இருக்கிறது.  குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட தேசிய மனித உரிமை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு இன்னும் கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்னும் கோரிக்கைகள் வைக்கப்படும் நேரத்தில், தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையம் குறைந்த பட்ச அதிகாரங்கள் இருப்பதை இந்த ஆணையமே மிகவும் வேதனையோடு தெரிவித்திருப்பதுதான் காலக்கொடுமை. மற்ற ஆணையங்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்றால், தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையம் ரப்பர் பாம்பு. ரப்பர் பாம்பின் பூச்சாணடிக்குப் பயப்பட இங்கு தவறு செய்பவர்களெல்லாம் குழந்தைகளா என்ன?   (ஆதாரம்: தேசிய துப்புரவுப்பணியாளர் ஆணையத்தின் 2015 - 16 ஆண்டறிக்கை).

அரசின் கொள்கைகள், வளர்ச்சித் திட்டங்கள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைய வேண்டும். அந்த மாற்றம் ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை உரிமைகளை நுகர்வதில் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமான முறையில் வாழ வழிவகுப்பதாக இருக்க வேண்டும். அந்த மாற்றம் கண்ணுக்கெட்டும் தூரம் காணக் கிடைக்கவில்லை என்பதே இன்றைய யதார்த்தம். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்படும், அதன் மூலம் திறந்தவெளி கழிப்பிடங்களை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது நண்பரும், துப்புரவுப் பணியாளர்கள் போராட்ட இயக்கத்தின் (Safai Karmachari Andolan) தலைவருமான பெஜவாடா வில்சன் அவர்கள் அரசாங்கத்தை நோக்கி 
 '12 கோடி கழிப்பறைகளால் நிரம்பும் கழிவைச் சுத்தம் செய்ய என்ன
கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது? சிறிய குழாயைக் கூட சரியாகப் பொருத்த
வக்கில்லாத அரசுத்துறைகளும், ஊராட்சி, நகராட்சி மன்றங்களும் என்ன
தொழில்நுட்பத்தைக் கையாளப் போகிறீர்கள்?'

என்று கேட்டார். இந்த அறிவிப்பு இன்னும் அதிகமாக தலித் மக்களை இந்த இழிதொழிலில் ஈடுபடவே  வழிவகுக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். அதற்கு மாறாக, இந்த இழிதொழிலில் மாட்டிக்கொண்டு இன்னலுறும் பெண்களை, அம்பேத்கரின் மனுநீதி எரிப்புப் போராட்டத்தைப் போல அவர்கள் மலம் சுமக்கும் கூடைகளை எரிக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லத் தூண்டுகிறார். 

மேற்கண்ட நிலைமைத் தெரிவிக்கும் கசப்பான உண்மை என்னவென்றால், துப்புரவுப் பணியைச் சட்டங்களாலும், திட்டங்களாலும் மட்டுமே  ஒழித்து விட முடியாது. துப்புரவுப் பணி சாதியமைப்பு முறையோடு தொடர்புடையது. சாதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த பல்வேறு குலத்தொழில் முறைகளில் காலத்தின் மாற்றங்களால் இன்றைக்குத் தளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பல குலத்தொழில்களை நவீன இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள் பறித்துக் கொண்டு போயிருக்கின்றன. சக்கிலியர்களிடமிருந்து செருப்பு உருவாக்கும் தொழிலையும், ஆசாரிகளிடமிருந்து கருவிகள் உருவாக்கும் தொழிலையும், நெசவாளர்களிடமிருந்து ஆடைகள் உருவாக்கும் தொழிலையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். எது அசுத்தம் குறைந்து இருக்கிறதோ, எதில் பணம் அதிகம் கொழிக்கிறதோ அந்தத் தொழில்களை முதலாளிகள் பறித்துக்கொண்டு போய்  விட்டனர். எது அசுத்தம் நிறைந்த இழிதொழிலோ அதனை ஒடுக்கப்பட்ட சாதிகளின் தலையில் கட்டி விட்டனர். இன்னும் அதைத் தொடர்ந்து செய்யுமாறு துன்புறுத்துகின்றனர். அப்படித்தான் துப்புரவுப் பணியும் அருந்ததியர் சமூகத்தின் குலத்தொழிலைப் போல அதைத் தொடர்ந்து செய்யுமாறு அவர்களைப் பழக்கியிருக்கின்றனர்.


குலத்தொழில்கள் வரலாற்றின் அடிப்படையில் பார்த்தாலும் துப்புரவுப் பணி அருந்ததியர் சமூகத்தின் குலத்தொழில் கிடையாது. தோல் தொடர்பான பொருட்களைத் தயார் செய்யும் சமூகமாகத்தான் அருந்ததியர் சமூகம் இருந்து வந்திருக்கிறது. பூமணியின் 'பிறகு' நாவலின் நாயகப் பாத்திரமான அழகிரிப் பகடை தோல் பொருட்கள் தொடர்பான பணிகளைச் செய்வதற்கே துரைச்சாமிபுரத்திலிருந்து மணலூத்துக்கு அழைத்து வரப்படுகிறார். நாவலில் காட்சிப்படுத்தப்படும்  சக்கிலிகுடி பகடைகள் பெரும்பான்மையினர் விவசாயக்கூலித்  தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். நாவலின் ஓரிடத்தில் மட்டும் ஊர்ப்புறங்களிலிருந்த சக்கிலியர்கள் நகரத்திற்குக் குடிபெயர்தலையும், அங்கு துப்புரவு பணிகளில் ஈடுபடுவதையும் சொல்லியிருப்பார். அதுவும் கோவில்பட்டி நகரத்திற்கு இடம்பெயர்ந்த சக்கிலியர்கள் வீதிகளைக் கூட்டுவதை ஊர்ப்புறங்களிலிருந்த சக்கிலியர்கள் ஏளனமாகவும், இழிவாகவும் பார்த்தார்கள் என்பதைப் போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இது நாவலில் வரும் ஒரு காட்சியாக, புனைவாக இருந்தாலும் இதுதான் வரலாற்று உண்மை. பிறகு எவ்வாறு இழிதொழிலான மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுந்தொழிலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்னும் கேள்வி எழுகிறது. ஆங்கிலேயர்களின் வருகையின்போது இருந்த நிலவுடைமையின் இறுதிக்காலத்திற்கும், நவீனமயமாக்கல் மற்றும் நகரமயமாக்களின் துவக்க காலத்திற்கும் இடையிலான வரலாற்றை இந்திய சாதியமைப்பு இயங்குமுறையின் அடைப்படையிலும், சமூகவியல் அடிப்படையிலும் நுண்மையாக ஆராய்ந்தால் மட்டுமே அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்.



எந்த சமூகம் சாதியமைப்பிற்கும், அநீதியான இந்துத்துவத்திற்கும் எதிராக சமரசமில்லாமல் கடுமையாகப் போரிடுகிறதோ அந்த சமூகம் எளிதில் மீள முடியாதபடி மிகவும் மோசமான இழிநிலைக்கு ஒடுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் மோசமான இழிநிலை என்பது ஒரு சமூகத்தில் மிகவும் இழிவாகக் கருதப்படும் தொழிலைச் செய்யும்படி துன்புறுத்தப்பட்டு எதிர்காலங்களில் அவர்களே அதனை மனமுவந்து ஏற்று நடக்கும் நிலைக்குத் தள்ளுவதாகும். இதுதான் தோல் தொடர்பானத் தொழிலைச் செய்து வந்த அருந்தத்தியர்கள் துப்புரவுப் பணியையும், மலம் அள்ளும் கேவலத்தையும் தொடர்ந்து செய்து வருவதற்கான உண்மைக் காரணமாகும். விவசாயம் சார்ந்த கமலை, பரி போன்ற தோல் பொருட்களைத் தயாரிக்கும் ஊரகத் தொழிலைச் செய்யும் சமூகம் (Rural Artisans) இன்று நகர்ப்புறங்களில் சாக்கடை அள்ளும் சமூகமாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் சாதியமைப்பு முறையும், ஏகாதிபத்திய சுரண்டலும், அதற்கு எதிராக இந்த சமூகம் முன்னெடுத்த மிகத் தீவிரமான போராட்டங்களேயாகும்.


நம் நாட்டின் இடைக்கால வரலாறு என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண் சமூகமாக இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. நம் நாட்டில் ஆதிகாலந்தொட்டு நகரங்கள் இருந்து வந்தாலும், நகரமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டது ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகுதான். இதைத்தான் கிராமப்புற சமுதாயத்திலிருந்து நகர்ப்புற சமுதாயமாக மாறியதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிக்கின்றனர். கிராமப்புற சமுதாயத்திலிருந்து நகர்ப்புற சமுதாயமாக மாறிய இந்த வரலாற்று மாற்றத்தை அருந்ததியர்கள் வரலாற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் பொழுதுதான் அருந்ததியர் சமூகத்தின் இன்றைய மிக மோசமான வாழ்வாதார நிலைக்கான காரணங்களைப் புரிந்து கொள்ள முடியும். மதுரை வீரன், குயிலி, ஒண்டி வீரன், பொட்டிப் பகடை, கந்தன் பகடை, முத்தன் பகடை முதலானோர் வீழ்த்தப்பட்ட வரலாற்றையும் மேற்கண்டவற்றோடு இணைத்துப் பார்க்கும் பொழுது ஏகாதிபத்தியத்திற்கும், சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான போரில் தோற்கடிக்கப்பட்டு, வரலாறு மறைக்கப்பட்டு, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு இன்றைய இழிநிலைக்குத் தள்ளப்பட்ட சூழல் வெட்ட வெளிச்சத்திற்கு வரும். ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய பல சமூகங்களுக்கு நேராத வீழ்ச்சி காலனியாதிக்கம், சாதியாதிக்கம் என்னும் அன்றையக் காலகட்டத்தின் இரண்டு கொடூர ஒடுக்குமுறையை எதிர்த்து சமரசமில்லாமல் போராடியதின் விளைவு மீண்டெழ முடியாத வீழ்ச்சிக்குத் தள்ளப்பட்டனர். பங்கி மற்றும் வால்மீகி சமூகத்தினரின் வீழ்ச்சிக்கும் இதே போன்ற வரலாற்றுக் காரணங்கள் உண்டு. ஒடுக்கியவர்கள்  ஒரே கூட்டம் எனும் பொழுது ஒடுக்கப்பட்ட விதமும், ஒடுக்கப்பட்டவர்களின் நிலையும் ஒன்றாக அமைந்ததில் விசித்திரம் ஏதுமில்லை.

 நாகரிகத்தின் முன்னோடி, பழம்பெருமை வாய்ந்த தொன்மைக் கலாச்சாரம் என்றெல்லாம் பீற்றிக்கொள்கிற இந்தியத் திருநாட்டின் உண்மை நிலை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அதுவும் இந்த கேடுகெட்ட கேவலத்தை ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவே செய்யுமாறு கட்டமைக்கப்பட்ட சமூகம் எப்படி வளர்ச்சியடைந்த சமூகமாக மாறும் என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. அவர்கள் ஓர் அடையாளத்தில் அணிதிரள வேண்டியதையும், அமைப்பாவதன் அவசியத்தையும், உரிமைகளை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும், துப்புரவுப் பணிகள், சுடுகாட்டுப் பணிகள் போன்றவை மனித மாண்பை முற்றிலும் மறுதலிக்கிறது என்பதையும், அதிலிருந்து மீளவேண்டிய தேவையையும் வலியுறுத்த வேண்டும். அந்த இழிதொழில்களிலிருந்து விடுபட வேண்டுமென்பதே நமது இலக்கு என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். அம்பேத்கர் விடுத்த அதே அறைகூவலை அவர் மறைந்த அறுபதாண்டுகளுக்குப் பிறகும் விடுக்க வேண்டிய துயரமான நிலையில்தான் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறது.


இப்போது நம் முன்னால் இருக்கும் சிக்கல் 'எப்படி இதிலிருந்து விடுபடுவது?' என்பதுதான். எல்லோரும் சொல்வதைப்போல இந்த தொழிலை நவீனமயப்படுத்துவதும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதும் தீர்வாகுமா? கையுறை மாட்டிக்கொண்டு குப்பைகளை அள்ளுவதாலும், ஆக்சிஜென் சிலிண்டர் பொருத்திக்கொண்டு மலக்குழிகளைச் சுத்தம் செய்வதாலும்  இழிவுநிலை நீங்கி விடுமா?எந்தவொரு பணிப் பாதுகாப்பும் இல்லாத நிலையிலேயே, ஒப்பந்தப் பணியாளர்களாகக் கூட செல்ல தயாராக இருக்கும் துப்புரவுப் பணியாளர்களின் இளந்தலைமுறையை, அவர்களின் பணிகளை நிரந்தரப்படுத்தி அவர்களுக்குத் தேவையான பணிப்பாதுகாப்புகளைச் செய்வது இந்த இழிதொழிலை நோக்கி அடுத்த தலைமுறையை மேலும் ஈர்க்காதா? நாட்டிலுள்ள உலர் கழிப்பிடங்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டு நவீன கழிப்பறைகளாக ஆகிவிட்டால் நாற்றம் போய் விடுமா? இந்த துறையை நவீனமாக்குகிற வேலைகளை அரசாங்கம் செய்யட்டும். இந்த பணியை உதறித்  தள்ளுவதும், மாற்றுத் தொழிலை மேற்கொள்வதும் உடனடித் தேவையாகும். அதை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வழமையான தொழிற்சங்கங்களைப் போல தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக மட்டும் இல்லாமல், எதிர்காலத் தலைமுறை இந்தப் பணியில் சேர்ந்து விடாமல் தடுப்பதே சங்கங்களின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். அவர்களை  மாற்று வாழ்வாதாரங்களை நோக்கி திசை திருப்பும் கடமை அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் உண்டு. ஏற்கனவே இந்தப் பணியில் இருக்கும் தொழிலாளர்கள் மாண்போடு பணி செய்யும் வகையிலான உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டங்களை நடத்தும் அதே வேளையில், தொடர்ந்து அடுத்த தலைமுறை இந்த இழிதொழிலில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்பதையும் நாம் உணர வேண்டும். கையால் மலம் அள்ளும் கேவலத்தை ஊக்கப்படுத்தக் கூடாது என்னும் எண்ணத்தை ஏற்று நடைமுறைப்படுத்தும் வகையில் கிராம மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளிலும், குறிப்பாக வணிக நிறுவனங்களிடத்திலும் என பொது  சமூகத்திடம் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அனைத்து இயக்கங்களும் இதனை ஒரு வேலைத் திட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக விரைவாகவும் நடைமுறைப் படுத்திட வேண்டும்.

துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு பழங்குடியினருக்கு இருப்பதைப் போல உண்டு உறைவிடப்பள்ளிகளும், கல்லூரிகளும் (Residential Schools and Colleges) தொடங்கப்பட்டு இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். கல்விபெறுகிற சூழல் அமைந்து விட்டால் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இன்றைக்கு நடைமுறையில் இருக்கிற 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் நகரங்களிலியே தேவையான நிலங்களை கையகப்படுத்தி அனைவரையும் சொந்த வீட்டு உரிமையாளர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பை அரசு ஏற்று செய்யுமாறு இயக்கங்களும், தொழிலாளர் சங்கங்களும் வலியுறுத்த வேண்டும். இதைப்போன்ற நல்ல செயல் திட்டங்களை உருவாக்கி  அரசிடமும், சமூகத்திலும் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து அவற்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாகப் பல  ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வேண்டும். சாதியமைப்பு எப்படி பல்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளதோ, அதைப்போல சாதி ஒழிப்பு என்பதும் பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. சாதி ஒழிப்பு களம் என்பது பரந்துபட்டது என்பதால் சாதி ஒழிப்பு என்பது  நீண்ட நெடிய போராட்டம் என்பார்கள். சாதி ஒழிப்பில் நாட்டமுள்ள பெரும்பாலானோர் கூட சாதியை அவ்வளவு எளிதில்  ஒழிக்க முடியாது என்றே நம்புவார்கள். ஆனால் வரலாற்றின் வெவ்வேறு காலக்கட்டங்களில் சாதிக்கெதிராக தொடுக்கப்படும் போராட்டங்கள் தோல்விகளையும், வெற்றிகளையும் மாறி மாறி பெற்றிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படிப் போராடி அடைந்த வெற்றிகளையும், தோல்விகளிலிருந்து பெற்ற  படிப்பினைகளையும் ஆராய வேண்டும். அந்த வழியில் புத்தர், பூலே, பெரியார், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்கள் அவர்கள் போராடி அடைந்த வெற்றிகளையும், தோல்விகளிலிருந்து பெற்ற  படிப்பினைகளையும் நமக்கு வழங்கி  சென்றிருக்கிறார்கள்.  அந்த பலத்திலேதான் இன்னும் வலிமையாக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் ஆயுட்காலங்களில் அவர்கள் அநீதியின் அடிக்கட்டுமானமாகத் திகழும் சாதிக்கு எதிராக சாதித்த சாதனைகளைப் போல இந்த தலைமுறைக்கும் தம் ஆயுட்காலத்திலேயே சாதியமைப்பை, அதன் பல்வேறு இழைகளில் சிலவற்றைத் தகர்க்கச் செய்யும் நல்லதொரு வாய்ப்பு கையால் மலம் அள்ளும் இந்த கேவலத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் கிடைத்திருக்கிறது.  வாருங்கள்! சாதியை ஒழிப்பதற்கான முன் நிபந்தனையாக கையால் மலம் அள்ளும் இந்த கேவலத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவோம்.

(கட்டுரையில் உள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள்).

சனி, 1 ஜூலை, 2017

அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ் ஆனேன்

அம்பேத்கர் தீண்டத்தகாதசாதியில் பிறந்தவர் என்ற சாதிப்பற்றினாலோ, அம்பேத்கரின் உழைப்பால் கிடைத்த இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்தவன் போன்ற அற்பக் காரணங்களுக்காகவோ நான் 'அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ் ஆனேன்!!' என்று சொல்லவில்லை. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும், பேச்சும், எழுத்தும் ஒரு மனிதனை மாமனிதனாக மாற்றும் வல்லமையைக் கொண்டது. அம்பேத்கரைப் படித்த எவரும் எவ்வளவு உயர்ந்த நிலைக்கும் உயரலாம் என்ற உண்மைப் பலபேருக்குத் தெரிவதில்லை. சாதியப் புரையோடிப் போயிருக்கும் கண்களுக்கு எந்த கண்ண...ாடி போட்டாலும் அம்பேத்கரின் அறிவார்ந்த உண்மை முகம் புலப்படுவதில்லை என்னும் காரணத்திலிருந்துதான் இந்தக்கட்டுரை எழுத வேண்டிய தேவை எழுந்தது.
http://www.vikatan.com/…/130425-veerapandian-ias-talking-ab…
இந்த கட்டுரை தலித் மாணவர்களை மனதில் வைத்து பௌர்ணமி அறக்கட்டளையின் ஆண்டு மலருக்காக எழுதப்பட்டது. இதைப் படித்த அன்புக்தங்கை பாடலாசிரியர்-கவிஞர் உமாதேவி இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். தலித் மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் இந்த கருத்துக்கள் ஈர்க்கும் என்று கருதினார். இதை வெளியிட கடும் முயற்சிகள் எடுத்த தங்கை உமாதேவிக்கு நன்றி சொல்வது ஒரு சடங்குதான். இதன் உள்ளடக்கம் கருதியும், அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டியும் நடுப்பக்கத்தில் வெளியிட்டு சிறப்பு செய்த ஜூனியர் விகடன் ஆசிரியர் தோழர். ப.திருமாவேலன் நெஞ்சார்ந்த நன்றிகள்.
சில எழுத்துப்பிழைகளும், சிற்சில செய்திகளும் தவறாக உள்ளன. பக்ரா நங்கல் திட்டம் என்பது தவறு. அந்த இடத்தில் ஹிராகுட் திட்டம் என்று வர வேண்டும். 'இறுதிகால விடுதியிலிருந்து' என்பது 'இரவு தங்கும் விடுதியிலிருந்து' என்று வர வேண்டும். பொதுவெளி கருதி பல வரிகள் விடுபட்டிருக்கிறது. இதை வெளியிட்டதற்காக ஜூனியர் விகடனுக்கு நன்றிகள்! 'எடிட்' செய்யப்படாத முழுக்கட்டுரையையும் வெளியிடுகிறேன்.


அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ். ஆனேன்!!

'அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ். ஆனேன் !!' - நான் 2009ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவுடன் என்னை நேர்காணல் செய்து செய்திகளை வெளியிட்ட செய்தியாளர்களில் சிலர் அவர்களின் செய்திக் கட்டுரைகளுக்குக் கொடுத்த தலைப்பு இது. இந்தத்  தலைப்பைப் படித்தவுடன் அனைவருக்கும் எழும் கேள்விகள் இதுதான். அம்பேத்கருக்கும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் அந்த கேள்வி. உலகின் எந்த மூலையானாலும் மனிதனாகப் பிறந்த ஒருவனுக்கு தான் பிறந்த சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்னும் வாழ்க்கை லட்சியம் இருக்கும். அப்படிப் பலருக்கும் லட்சியம் இருப்பதே சமூக யதார்த்தம். ஆனால் இந்தியாவில் மட்டும் சமூக யதார்த்தம் வேறுவகையாக இருக்கிறது.

இந்தியாவின் சமூக யதார்த்தம் ஒருவர் பிறந்த சாதி, அவரின் பொருளாதார நிலை, வாழிடச் சூழல் பொறுத்து அமைகிறது என்றாலும் சாதி என்னும் காரணி இந்தியாவில் பிறந்த ஒருவரின் வாழ்க்கை லட்சியங்கள் நிறைவேறுவதில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. இந்த சாதி எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதை கண்டுகொள்வது எளிது. ஏனென்றுச் சொன்னால் பிறந்த நொடி முதல் இறக்கும் நொடி வரை சாதி விளையாடும் சதிராட்டத்தை ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த சதிராட்டத்தில் திறமையாக விளையாடி எல்லோரும் வெற்றியை அடைவதில்லை. இந்த சதிராட்டத்தின் ஆணிவேரையும், அது இயங்கும் நுட்பங்களையும் அறிந்தவர்களுக்கு மட்டுமே வெற்றி என்பது சாத்தியமாகும்.

தன்  இளம்பிராயத்தில் கிராமத்தின் ஒதுக்குப்புறங்களிலும், நகரத்தின் சேரிகளிலும் ஒரு தலித் சிறுவன் எதிர்கொள்ளத் துவங்கும் சாதியமைப்பின் பரமபத ஆட்டம் எப்போதும் சாதிப்பாம்பின் விச நாக்குகளால் கொத்திக்கொத்திக் கீழே தள்ளப்பட்டு வீழ்ச்சியை மட்டுமே சந்திக்கும் துர்பாக்கிய நிலையிலேயே வைத்திருக்கும். ஏறிச் செல்வதற்கு எல்லோருக்கும் ஏணிகள் கிட்டுவதில்லை. இவ்வாறான நிலையில், நம்முடைய முன்னோர்கள், நமக்கு மூத்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அவர்களின் வரலாறு நமக்குப் பல படிப்பினைகளைத் தருகிறது. நாம் வாழும் சமூக, வாழ்க்கைச் சூழலோடு மிகவும் நெருக்கமாகவும், பல விதங்களில் ஒத்துப்போகவும் கூடிய முன்னோர்களின் வாழ்க்கைச் சூழல் நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தரும்.

அதிலும், சமூகத்தின் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்ற உத்வேகம் கொண்டவர்கள் அவர்களை விட உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதும், அதிலிருந்து தனக்குத் தேவையான செய்திகளை எடுத்துக் கொள்வதும் அவர் லட்சியங்களை அடைவதற்கு  உறுதுணையாக இருக்கும். கலெக்டராக வேண்டும் என்னும் கனவு கண்ட சிறு வயதில்  நான் படித்த 'அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு' நான் பாதை மாறும் ஒவ்வொரு இடத்திலும் எனக்கு சரியான வழியை காட்டி, சோர்ந்து விழும் பல நேரங்களில் என்னை உற்சாகப்படுத்தி இந்த நிலைக்குகொண்டு வந்து சேர்த்தது. அதன் அடிப்படையில்தான், அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ். ஆனேன்!! என்று சொன்னேன்.

ஜனநாயகத்தின் அடிப்படையிலான, சமத்துவத்தை நோக்கிய, என்றைக்கும் சிதறுண்டு போகாத வலிமையான நவீன இந்தியாவை உருவாக்கிய தலைசிறந்த சிந்தனையாளர் அம்பேத்கர். அவர் மேதாவிகளின் மேதாவி. அப்படியொரு சிந்தனையாளரின் வாழ்க்கையில் நடந்த தீண்டாமைக் கொடுமைகள் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறக்கும் எவருக்கும் நேரக் கூடியதுதான். ஆனால் அந்த கொடுமைகளின் பிடிகளிலிருந்து ஒரு  ஒடுக்கப்பட்டவன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

இந்திய சமூகத்தின் படிநிலை அமைப்பில் மேல்நோக்கி முன்னேறிச் செல்லலாம் என்கிற பெருங்கனவோடு போட்டிகள் நிறைந்த  களத்தில் உள்ளே நுழையும் தலித் மாணவர்களும், இளைஞர்களும் கொலைகளுக்கும்  தற்கொலைகளுக்கும் பலியாகிக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தலித் இளைஞனின் பார்வையிலிருந்து கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் தள்ளத்தூண்டும் காரணிகள் யாவை என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கிறேன். ஒன்றே ஒன்றுதான் உறுத்திக்கொண்டு தெரிகிறது. அது அவன் பிறந்த சாதி. பிறப்பில் ஒட்டிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட சாதி அடையாளம் இந்த மண்ணை விட்டு மனிதன் மறைந்தாலும் மறைவதேயில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்கும் ஒருவனுக்கு அது இன்னும் பெரும் கேடுகளை விளைவிக்கிறது.

இந்த நிலையில் சிறு வயது தீண்டாமைக் கொடுமைகள், வறுமையின் நெருக்கடி, ஆதரவற்ற கையறு நிலை ஒரு தலித்தை அன்றாடம் தன் உயிரை நிலைநிறுத்திக் கொள்ளவே சொல்லி மாளாத இன்னல்களைச் சந்திக்க வைக்கிறது. துயரங்களைச் சுமப்பவனாக இந்திய சமூகம் அவனின் வாழ்க்கையை நிர்ணயித்திருக்கிறது. இதில் அவன் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்வதற்கு எந்த நிலையிலும் வாய்ப்பில்லை. மேலும் அவன் வாழ்வில் இலட்சியங்கள் ஏதுமற்றவனாக, அதன் பொருளைக் கூட விளங்கி கொள்ள முடியாதவனாக ஆக்கி வைத்திருக்கும். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த எவரும் சாதிக்கும் எண்ணத்தோடு உலவக்கூடாது என்பதுதான் இந்த ஆட்டங்களின் ஒரே விதியாக இருக்கிறது. சாதி தீண்டாமை, பொருளாதார நெருக்கடி, படித்த பெற்றோர்களின் வழிகாட்டுதல்கள் அமையாமை, கல்விப் பின்புலம் இல்லாமை போன்ற பல்வேறு துன்பங்களுக்கிடையில்  தட்டுத் தடுமாறித் தன்  தனிப்பட்ட திறன்களால் முன்னேறும் ஒரு sc இளைஞனுக்கு ஏறும் ஏணிகளாய் இருக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் கூட உயிரைக் கொல்லும் விசப்பாம்புகளாய் மாறிப் போன காலம் இது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,  கீழ்க்காணும் சூழலில் படிக்கும் பெரும்பாலான தலித் மாணவர்களுக்கு வருந்தத்தக்க மனத் தடைகள் உள்ளன. அவை

1) அரசுப் பள்ளியில் கல்வி

2) தமிழ் வழியில் கல்வி கற்றல்

3) ஆர்ட்ஸ் குரூப்பில் பட்டம்

4) பொருளாதார ரீதியாக வறுமைச் சூழலில் குடும்பம்

5) ஊழல் நிறைந்த இந்நாட்டில் நமக்கெங்கே கிடைக்கப் போகிறது என்ற விரக்தி. பணத்தால் மட்டுமே வேலை வாங்க முடியும் என்னும் தவறான எண்ணம்..

இந்த ஐந்து மனத் தடைகளும் தேவையற்றது. இவற்றை நினைத்து மனம் புழுங்கித் தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தேவையில்லை. இத்தடைகளை உடைத்தெறிந்து வாழ்வில் பெரும் சாதனைகளை புரிந்த பலர் உள்ளனர். அவர்களில் முதன்மையானவர் 'அறிவுச் சூரியன்' அம்பேத்கர்.

பள்ளிக்குக் கோணிச்சாக்கோடு சென்று தனியாக உட்கார்ந்து பாடம் படித்தவர். அன்றைய நாட்களில் அவருக்கு முன்னால் உட்கார்ந்து  அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த உயர்ந்த சாதியைச் சேர்ந்த  எத்தனை மாணவர்கள் குறைந்த பட்சம் அந்த பள்ளிப் படிப்பை முடித்திருப்பர்?  பின்னாட்களில் அம்பேத்கர் கப்பலிலும், விமானங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பாரென்று குதிரை வண்டியிலிருந்து தள்ளி விட்ட வண்டிக்காரன் ஊகித்திருப்பானா? சாகு மகாராஜா அம்பேத்கர் உயர்கல்வி கற்பதற்கு நிதியுதவி செய்தபோது அவரால்தான் நாட்டின் நிதியையே மேலாண்மை செய்யும் இந்திய ரிசர்வ் பேங்க் உருவாகும் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? அலுவலகத்தில் அம்பேத்கருக்குக் குடிக்கத்  தண்ணீர் தர மறுத்த அலுவலக ஊழியர்கள் எதிர்காலத்தில் அவர் சிந்தனைத் துளிகளிலிருந்து உதித்தெழும்  திட்டங்களின்  அடிப்படையில்தான் 'நவீன இந்தியாவின் கோயில்கள்' என்று அழைக்கப்பட்ட நீர்வளத்தைப் பெருக்கும் ஹிராகுட் திட்டம் மற்றும் தாமோதர் நதி பல்நோக்குத் திட்டம்  நிறைவேற்றப்படும் என்று அக்கணம் யோசித்திருப்பார்களா? நட்ட நாடு ராத்திரியில் இரவு தங்கும் விடுதியிலிருந்து விரட்டியவர்கள் அவரின் பெயரால் லட்சக்கணக்கான குடியிருப்புகளும், விடுதிகளும் கட்டப்படும் என்று கனவு கண்டிருப்பார்களா?

இப்படி வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் எவ்வளவு துன்பகரமானதாக இருந்தாலும், கொடுமையானதாக இருந்தாலும் அதற்கு இரையாகி விட்டால் யார் இந்த துன்பங்களும், கொடுமைகளும் எதிர்காலத்தில் பிறருக்கும் நிகழாவண்ணம் தடுப்பது?வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் இந்த வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே வந்திருப்பது புலப்படும். சொல்லொண்ணாக் கொடுமைகளால் கொத்துக்கொத்தாக சாகடிக்கப்பட்ட சோகங்களில் சிக்கி சோர்ந்து போகக்கூடிய சம்பவங்கள் நிறைந்திருக்கும் வாய்ப்புண்டு. அதற்குள் ஆட்பட்டுவிடக் கூடாது.

எல்லாவிடங்களிலும் இல்லாவிட்டாலும் பல இடங்களில் மக்கள் வெகுண்டெழுந்து போராடிய களங்கள் உண்டு.  வீரமும், தீரமும் நிறைந்த தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடிய காட்சிகள் உண்டு. வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடிய இடங்களில் நிரந்தரத் தீர்வைக் கண்ட நிகழ்வுகளும் உண்டு. மக்களின் திரட்சி மாற்றத்தை உருவாக்கிய இடங்களும் உண்டு. நம்முடைய வாசிப்பு அதனை நோக்கிச் செல்ல வேண்டும். தோல்விகளிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் கிடைக்கும் பாடங்களை பெற்றுக் கொண்டு, நம்முடைய தேடல் வெற்றி கண்ட போராட்ட வரலாற்றைத் தேடிச் செல்ல வேண்டும். அந்த வரலாறுதான் வன்கொடுமைகளிலிருந்தும், இழிவுகளிலிருந்தும் நம்மை மீட்டெடுக்க ஊக்கப்படுத்தும். அந்த வரலாறுதான் சமத்துவம் நிறைந்த, முழு சுதந்திரமுள்ள, மனித மாண்புகளோடு வாழ்வதற்கேற்ற சமூகத்தை உருவாக்கும் பணியை உற்சாகமாய் செய்யத் தூண்டும். அத்தகைய ஊக்கத்தையும், உற்சாகத்தையும், எழுச்சியையும், போர்க்குணத்தையும் அளிக்கவல்லதுதான் அம்பேத்கரின் வாழக்கை வரலாறு.

அம்பேத்கரின் இளவயது வரலாறு படிப்போருக்கு ஆத்திரமூட்டும். அவர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகளின் கொடூரம் அத்தகையது. அம்பேத்கரின் மாணவப் பருவ வரலாறு வாசிப்போருக்கு ஆச்சரியமூட்டும். மாணவனாக அவர் தொட்ட உயரங்கள் எவரும் தொட முடியாதவை. அம்பேத்கரின் ஆரம்பகால அரசியல் ஒவ்வொருவரையும் சாதி அழிப்புப் போருக்கு எதிராக அணிதிரள ஒன்றுகூட்டும். தாம் செல்ல வேண்டிய தடத்தைத் தானே அமைத்துக் கொள்ளும் தலைமைப் பண்பு தீண்டத்தகாத  சமூகம் அதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது. 1940-களில் அம்பேத்கர் நிகழ்த்திய உச்சக்கட்ட அரசியல் அறிவூட்டும். அவரின் எழுச்சி நிறைந்த பேச்சும், ஆற்றல்மிகுந்த எழுத்தும், மறுக்க முடியாத வாதத் திறமையும் அவரின் அறிவுப் பெருவெள்ளத்தின் ஒரு சிறுதுளி. அம்பேத்கரின் இறுதிக்கால அரசியல் சமூக உணர்வையூட்டும். நிலவிய சமூக அரசியல் சூழலையொட்டி அவர் எடுத்த முடிவுகளும், கையாண்ட உத்திகளும் தந்த துவக்ககால விளைவுகளை தானே கண்டு, இறுதியில் கண்டடைந்த விடுதலைப் பாதை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எதிர்காலம். அம்பேத்கரின் பெயர் ஒடுக்கப்பட்டவனிடத்தில் கலகமூட்டும். அம்பேத்கரின் முகம் ஒடுக்குபவனிடத்தில் கலக்கமூட்டும்.

திக்குத் தெரியாமல் திணறி நிற்போருக்குத் திசைகாட்டி. ஊமைகளாய் இருந்த மக்களின் குரலாய் பேசியவர். வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் உரிமைகள் இழந்த மக்களுக்காக அர்ப்பணித்தவர். தலித் சாதியில் பிறந்தவர் என்பதாலேயே அவரை நமக்கான 'முன் மாதிரி'யாகக் கொள்ள வேண்டும் என்னும் சாதிப்பற்றின் அடிப்படையிலோ, சாதிப்பெருமையின் வெளிப்பாட்டுக்காகவோ சொல்லவில்லை. அம்பேத்கரைப் படிக்காமல் விட்ட பல சமூகங்கள் தங்களின் வரலாற்றை மறந்தன. அவரின் அரசியலைக் கற்காமல் தவற விட்ட மக்கள் கிளர்ச்சி செய்ய மறந்தனர். இந்தியாவின் எவ்வளவு கடினமான சமூக, அரசியல், பொருளாதார சிக்கலாக இருந்தாலும் அவற்றைத் தீர்ப்பதற்காக அறிவார்ந்த ரீதியில் பல்வேறு மாற்று வழிகளைச் சொல்லிச் சென்றவர்.


நான் சமூகத்தின் உயர்ந்தநிலையை அடைந்திருக்கிறேன் என்று நம்பும் இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அம்பேத்கர் அதன் துவக்கப் புள்ளி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அம்பேத்கர் கடும் உழைப்பின் சின்னம்! அன்பின் ஊற்று! அறிவின் சுரங்கம்! தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட தன்னெழுச்சி! அதற்காகத்தான் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் அம்பேத்கரின் வரலாற்றைக் கற்க வேண்டும். இழிவுகளைத் துடைத்தெறிய அம்பேத்கரின் பேச்சுக்களைப் படிக்க வேண்டும். ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற அம்பேத்கரின் எழுத்துக்களை வாசிக்க வேண்டும். எப்போதும் சொல்வேன்.. 'அம்பேத்கரைப் படித்தேன்! ஐ.ஏ.எஸ். ஆனேன்!!'

சனி, 28 ஜனவரி, 2012

இப்படிக்கு, தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்

இந்த நினைவுக் குறிப்பை (கட்டுரையை) கடந்த ஆசிரியர் தினத்தையொட்டி எழுதினேன். குறிப்பாக அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களைப் பற்றியதாக இருந்தாலும், எனக்குப் பிடித்தமான ஆசிரியர்களின் பண்புகளை எடுத்துரைப்பதன் வாயிலாக மாணவர்களுக்குப் பிடித்தமான, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு விருப்பமான முறையில் பாடங்களை நடத்துவது மட்டுமல்லாது அவர்களின் தனி மனிதப் பண்புகளை வளர்த்தெடுப்பவர்களாகவும், உயர்ந்த இலட்சியங்களோடு அவர்களை உருவாக்குபவர்களாகவும் உள்ள ஆசிரியர்களின் தன்மைகளை இக்கட்டுரை எடுத்துச் சொல்லும் என நம்புகிறேன். நம் கல்வித் திட்டத்தைப் பற்றிய விமர்சனத்தில் முக்கியமானது, கல்வி கற்றல் முறை, மாணவர் திறன் வளர்ப்பு மற்றும் ஆசிரியர்-மாணவர் உறவு முறைகளை மறுசீராய்வு செய்வதாகும். அதையொட்டி, nostalgia பார்வையில், ஆசிரியர்களுக்குரிய பொதுவான குணாதிசியங்களை விமர்சன முறையில் இங்கு பட்டியலிட்டு இருக்கிறேன். மேலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளை வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆசிரியர்களின் கடமையையும் சுட்டிக் காட்டியிருப்பதாக எண்ணுகிறேன். 






  இப்படிக்கு, 
தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்



ஆசிரியர் தினத்தில் என் மனதில் உருண்டோடிய, எனக்குக் கற்றுக் கொடுத்த பேராசான்களைப் பற்றிய ஞாபகக் குறிப்புகள்...  



என் பள்ளிக்கூடத்து ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகள் மாலை நேரத்து அந்தியாய் என் மனதை வண்ணங்களால் பூசியிருக்கிறது. அவர்களை நினைக்கும் அந்த தருணம் மழைக்காலத்தில் தோன்றும் வானவில்லைப் போல வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. சிறு பிராயத்திலிருந்து எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவரும் வேறுவேறான பிம்பங்களாய் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒருவிதம். மாணவர்களை வசீகரிப்பதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி உத்திகள் உண்டு. வெவ்வேறான சூழலிருந்து வரும் எல்லோரையும் வகுப்பறையில் ஒரே சூழலுக்குள் கொண்டு வரும் பணி அவர்களுடையது. பாடம் சொல்லித் தரும் நேரங்களில் அனைவரையும் ஒரே மனநிலைக்குள் இழுத்து வர அவர்கள் கையாளும் வழிமுறைகள் ஏராளம். காற்றடித்து மணல் பறந்தாலும் குலையாத பாலைவனங்களின் மணற்கோடுகள் மாதிரி அவர்களைப் பற்றிய ஞாபகங்கள் நீண்டு கிடக்கின்றன.


இன்றைக்கும் என் ஒன்றாம் வகுப்பின் ஆசிரியர் சுசீலா டீச்சர், இரண்டாம் வகுப்பின் ரஞ்சிதா டீச்சர் எப்படி பாடம் நடத்துவார்கள் என்பது என் கண்  முன்னால் நிழலாடுகிறது. மூன்றாம் வகுப்பில் எங்களை மகிழ்வித்த ராஜசேகர் சாரின் விளையாட்டுக்களை எங்களால் மறக்க முடியாது. போலீஸ்காரரைப் போல பெரிய மீசை வைத்துக் கொண்டு  அடிக்கமாலேயே எங்களைப் பயமுறுத்துவதையும், இரண்டு காதுகளையும் கொத்தாகப் பிடித்து தூக்குவதையும் நினைக்க நினைக்க இப்போதும் மனது குதூகலம் அடைகிறது. போலீஸ் வேலையை உதறி விட்டு ஆசிரியர் வேலைக்கு வந்தததாக எங்களுக்குள் நாங்களே புரளியைக் கிளப்பி விட்டு, அதை உண்மை என்று மனதார நம்பினோம். இப்படி பல புரளிகளைக் கிளப்பி விடுவதும், அதை உண்மை என்று எங்களுக்குள் தலையில் அடித்து சத்தியம் செய்து கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.


இந்த ஆசிரியர் தினத்தில், அவர்களை நினைவுகூரும் போது பிரம்புகளோடும், ரூல் தடியோடும் சிலர் வந்து போகிறார்கள். அவர்களை எவ்வளவு வசை பாட முடியுமோ அவ்வளவு வசை பாடியிருக்கிறோம். எங்களுடைய எல்லா சாபத்திற்கும் பலிகடா ஆவதிலிருந்து அத்தகைய எந்த ஆசிரியரும் தவறியதில்லை. அவர்களின் சைக்கிள் டயர்களில் காற்றைப் பிடுங்கி விடுவது, இருக்கையில் களிமண்ணைத் தடவி விடுவது, 'டீ' யில் எச்சில் துப்பி வைப்பது என அவர்களைப் பழி வாங்குவதில் வெற்றி கண்டிருக்கிறோம். ஆனால், சில ஆசிரியர்களின் மீது மட்டும் அன்பும், மரியாதையும் அளவற்று சுரக்கும். அவர்கள் செல்லமாக கன்னத்தைக் கிள்ளிய இடம் இன்றும் சுகம் தருகிறது. என்னுடைய சேட்டைகளில் திடீரென கோபமடைந்து அவர்கள் பிடித்துத் திருகிய காதையும், வயிற்றையும் இச்சமயம் தொட்டுப் பார்த்தால் கூசுகிறது. அவர்களை யாரவது திட்டினாலோ, சாபமிட்டாலோ எனக்கு பொல்லாத கோபம் வந்திருக்கிறது.


அந்த வரிசையில் வரும் நான்காம் வகுப்பு ஆசிரியர் பிரேமா டீச்சர், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நாகஜோதி டீச்சர் இன்றைக்கும் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வரும் போது, அவர்களோடு நட்பு பாராட்ட போட்டி போடுவோம். எல்லா விளையாட்டுக்களிலும் அவர்களைச் சேர்த்துக் கொள்வதில் பெருமிதம் கொள்வோம். அவர்கள் எது செய்தாலும் ஆர்வத்தோடு கவனிப்பதற்கும், என்ன சொன்னாலும் கேட்பதற்கும் ஒரு கூட்டம் தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும். இன்றைக்கும் அவர்களோடு பேசும் போது நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பின்னும் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்பார்கள். தேவதைகளும், தேவதூதர்களும் சூழ, கழிந்த என் குழந்தைப் பருவம் இனிமையான முறையில் அமைந்திடக் காரணமானவர்களோடு ஐ.ஏ.எஸ். அதிகாரியான பின்னும் தொடர்பில் இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறதென்று நான் சொல்லுவேன்.




ஒரு மாணவன் பள்ளியில் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியையும், எவ்வளவு மகிழ்ச்சிகரமாக ஆக்க முடியுமோ அதை மிக எளிதாக நடத்திக் காட்டும் ஒரு ஆன்மா திருமலை சார். கல்வித்திட்டம், பாடத்திட்டம், பள்ளி விதிமுறைகள், நடைமுறைகள், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகளின் கண்காணிப்பு என்று எதுவெல்லாம் மாணவர்களின் மகிழ்ச்சிக்கு குறுக்கே நிற்கிறதோ அதை அனைத்தையும் துச்சமென நினைத்து தூக்கி எறிந்து விட்டு, மாணவர்கள் விரும்பும்படி கதைகள் மட்டுமே சொல்லுவார். அவர் வரலாறு, புவியியல் என எந்த பாடம் எடுத்தாலும் வகுப்பில் சிரிப்பு சத்தம் அடங்கவே அடங்காது. அனைவரது மனமும் சந்தோசத்தில் நிரம்பி வழிந்தோடும். மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்து அதிலேயே லயித்திருக்கும் வாய்ப்பு அவருடைய வகுப்புகளில் மட்டுமே கிடைக்கக் கூடியது. ஒரு மனிதனின் முகம் அவ்வளவு பிரகாசத்தை அடையக்கூடியதா என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் தோன்றும். அவர் மட்டுமே இத்தனையையும் செய்து காட்டக்கூடிய பெரும் வல்லமை பொருந்தியவர். தேவையில்லாமல் மாணவர்களை தொல்லைகளுக்கு உள்ளாகும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களோடு மல்லுக் கட்டி, சண்டை போட்டு, அனைவரிடமும் பகை வளர்த்துக் கொள்பவர். என்னுடைய உயர்நிலைக் கல்வியைத் தித்திக்கும் பாகாக்கியவர்.


ஒரு சிற்பியைப் போல தேவையல்லாதவற்றை நீக்கி, அவசியமான இடங்களில் எல்லாம் உளியடித்து என்னை ஊர் பாராட்டும் சிற்பமாக்கிய அன்புச்செல்வன் சாரைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். என்னுடைய மேல்நிலைக் கல்வியில் சிறப்பானதொரு வெற்றியை அடைவதற்கும், வாழ்க்கையில் நல்லதொரு நிலையை எட்டுவதற்கும் காரணகர்த்தவானவர். ரொம்பவும் அமைதியான சுபாவம் என்றும் சொல்வதற்கில்லை; ஆனால் அர்த்தமிழந்த வார்த்தைகளைத் துணைக்கு எடுத்துக் கொண்டும் பேச மாட்டார்;  கண்டிப்பானவர்; ஆனால் எடுத்ததெற்கெல்லாம் பின்னி எடுக்கிற 'பயில்வான்' வாத்தியார் இல்லை. மாநில அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டுமென முடிவெடுத்து அதற்கான பயணத்தில் தளராமல் நடை போட்டவர். மாநகராட்சிப் பள்ளியிலிருந்து மாநில அளவில் மதிப்பெண்கள் பெற எண்ணுவதை இளக்காரமாகப் பார்ப்பதுதான் யதார்த்தம். ஆனால், தன்னுடைய மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று திடமாக நம்பியவர். எங்களைக் கல்வியில் சாதிக்க வைப்பதற்கு எங்களை விட கடுமையாக உழைத்தவர். அதனை என் மூலம் நிறைவேற்றிக் காட்டிய போராளி. இவ்வாறே, என்னுடைய பள்ளிக்காலத்தில் பலவற்றை என்னுடைய ஆசிரியர்களிடமிருந்தே கற்று வந்திருக்கிறேன். சில ஆசிரியர்களிடம் சில குணங்கள் பிடித்திருந்தன. மற்ற சிலரிடம் மற்ற சில பண்புகள் விருப்பமாய் இருந்தன. எனக்குப் பிடித்த அனைத்து குணநலன்களோடும் எல்லா ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்று சிறு வயதில் எத்தனையோ முறை கனவு கண்டிருக்கிறேன், அது ஒருபோதும் நிறைவேறியதில்லை. உலகத்தில் இருக்கும் எதுவும் எந்த குறைகளுமற்ற, எல்லாமும் நிறைந்த முழுமையோடு இருப்பது சாத்தியமில்லை என்பதைக் காலம் செல்லச் செல்ல புரிந்து கொண்டேன்.




என்னுடைய பள்ளிக்காலம் முழுவதும் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் கழிந்தது. என்னோடு படித்த பெரும்பாலான மாணவர்கள் நான் உட்பட கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள்தான். நான் படித்த ஆரம்பப் பள்ளி வீட்டிற்கு அருகாமையில் எங்களுடைய சேரியை ஒட்டியே இருந்தது. பள்ளிக்கூடம் முடிந்தாலும் இருட்டும் வரை விளையாடி விட்டுத்தான் போவோம். என்னுடைய அம்மா அரவிந்த் கண் மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு மாலை ஆறரை மணிக்குத்தான் வீடு திரும்புவார். வந்ததும் எங்களின் பசியாற்றுவதற்கு சமைக்கத் தொடங்கி விடுவார். நாங்கள் பள்ளியில் என்ன படித்தோம்; ஆசிரியர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்கள்; வீட்டுப்பாடம் எதுவும் செய்ய வேண்டியிருக்கிறதா; தேர்வு எதுவும் வருகிறதா; அதற்கு எதுவும் படிக்க வேண்டுமா என்று எந்த கேள்வியும் கேட்டதில்லை. காரணம், படிக்கிற குழந்தைகளிடம் இதை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவருக்குத் தெரியாது. என்னுடைய தந்தை வெளியூர்களுக்குச் சென்று வியாபாரம் செய்கிறவர். மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். 'படிச்சு பெரிய ஆளா வரணும்' என்கிற தினசரி அறிவுரையைத் தவிர அவரும் இதைப் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. (எனினும், படித்த பெற்றோர்களை விட அவர்கள் நிறைய நற்பண்புகளை எங்களுக்கு  போதித்திருக்கிறார்கள்)


இப்படித்தான் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் யாரும் கட்டணம் செலுத்தி மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வதில்லை. பாரதியார் பாடியதைப் போல மாலையில் ஓயாமல் ஓடி விளையாடிக் கொண்டிருப்போம். இந்த பெற்றோர்கள் அனைவரும் பறவைகள் இரை தேடிச் செல்வதைப் போல காலை எழுந்தவுடன் சென்று வானம் தன்னை இருளால் மூடிக் கொள்கிற இராப்பொழுது வீடு வந்து சேர்வார்கள். தங்கள் உடலை தாங்களே முறுக்கிப் பிழிந்து சாறு எடுத்து முதலாளிகளுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும், சூப்பர்வைசர்களுக்கும் கொடுத்து விட்டு சோர்ந்து போய் வருவார்கள். வந்து சேர்ந்ததும் சமைப்பதும், பரிமாறுவதும், சுற்றத்தாருடன் சற்று நேரம் உரையாடுவதும், உறங்குவதும், உறங்கி எழுந்து அடுத்த நாள் அதே பணியைத் தொடர்வதுமாக இவர்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த தொடர் சுழற்சியால் ஏற்பட்ட சோர்வும், கங்காணிகள், மேஸ்திரிகளின் கண்காணிப்பில் வளர்ந்த வெறுப்பும் இவர்கள் குழந்தைகளைக் கண்காணிப்பதில் அக்கறை கொள்ளாமல் செய்திருக்கலாம்.


இந்நிலையில், இந்த குழந்தைகள் எதாவது விசயங்களைக் கற்கிறார்கள் என்றால் அது பள்ளிக்கூடத்தில்தான்; அதுவும் ஆசிரியர்களிடத்தில்தான். ஒரு மாணவரின் வாழ்க்கையை உருவாக்குவதில் மிகப்பெரும் பங்கை நாம் வகிக்கிறோம் என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர்ந்து செயல்பட்டார்களா என்று அவ்வளவு எளிதில் என்னால் சொல்லி விட முடியவில்லை. ஆனால், கடலுக்கு நீல நிறத்தை அளிக்கும் வானத்தைப் போல ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் எதிரொலிப்பு எப்போதும் இருக்கிறது.


ஆசிரியர்கள் அறியாமல் ஒவ்வொரு மாணவரும் அவர்களுடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறார்கள். அவர்களுடைய செயல்களைக் கூர்ந்து நோக்குகிறார்கள். ஆசிரியர்கள் பேசுகிற முறை, நடக்கிற நடை, சிரிக்கும் விதம், கோபம் கொள்ளும் பாங்கு என அத்தனை உணர்சிகளையும் கற்கிறார்கள். பல பேரின் கையெழுத்து நடை அவர்களின் ஆசிரியர்களின் கையெழுத்து நடையோடு ஒத்திருப்பது கூட இந்த 'கூர்ந்து நோக்குதலினால்' ஏற்படுவதேயாகும். பெற்றோர், உடன்பிறந்தார், சுற்றத்தார் என அனைவரிடமிருந்தும் நிறைய விசயங்களைத் தருவித்துக் கொண்டாலும், ஆசிரியரிடமிருந்து உள்வாங்கிக் கொள்வதுதான் அதிகமாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். காரணம், படிக்கும் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய ஆசிரியர்களே எல்லாரைக் காட்டிலும் புத்திசாலி; திறமைகள் நிரம்பியவர். நாட்கள் நகர நகர அவர்களுடைய எண்ணம், மதிப்பீடு மாறலாம். ஆனால் அவர்கள் மீதான பிரமிப்பும், மரியாதையும் எப்போதும் குறையாது. இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி இதுதான், ஆசிரிய வர்க்கத்தில் அடங்கிய எல்லா ஆசிரியர்களும் இதைப் புரிந்து கொண்டு  நல்ல குழந்தைகளை,  மனிதர்களை உருவாக்குவதில் சுய உணர்வோடும், சமூக அக்கறையோடும் நடந்து கொள்கிறார்களா?

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஐ.ஏ.எஸ். ஆன அந்த நொடிப்பொழுது....

ட்ரிங்.... ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...
மாலை
நான்கரை மணி இருக்கும். அரைக்கால் தூக்கத்தில் இருந்த எனக்குத் தெளிவாக கேட்டது. புது தில்லியில் நேர்முகத் தேர்வை முடித்து விட்டு சென்னைக்கு வந்த பின்பு முதல் நிலைத் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்த நேரம். இறுதிக் கட்ட முடிவுகள் எப்போதும் வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
'ஹலோ!' அறைத் தோழன் பிரபு தனக்கு வந்த அழைப்பில் பேசத் தொடங்கினான்.
'என்னது.
.. ரிசல்ட் வந்துருச்சா?' மறுமுனையில் இருந்து பேசியவரிடம் நான் பேசாமலேயே அச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். ஒளியின் வேகத்தில் ஒரு பாம்பு மின்னலைப் போல அடி பாதத்தில் இருந்து குறுக்காக உடல் முழுதும் ஓடி உச்சந்தலையை அடைந்தது.
'
எப்போ?'
'
யார் யார் க்ளியர் பண்ணியிருக்காங்க?'
'
வீரபாண்டியன்... வீரபாண்டியன்... 'ரிசல்ட் வந்துருச்சு' ன்னு சொல்றாங்க வீரபாண்டியன்'.
'
ம்ம்.... இந்தா வர்றேன் பிரபு' பொறுமையாகத்தான் சொன்னேன். ஆனால் உடலெங்கும் மின்சாரம் பாய்ச்சியதைப் போல ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது. ஏற்கனவே சூடு வாங்கிய அனுபவம் மீண்டும் தலை எட்டிப் பார்த்தது. பல நல்ல உள்ளங்களின் நன்கொடையாலும், பொன்மனங்களின் பொருளுதவியாலும் படித்துக் கொண்டிருந்த எனக்கு அந்த பதற்றம் வர வேண்டும். ஆனால் இது மற்றவர்களுக்கு வழக்கமாக ஏற்படும் பயத்தால் தோன்றியதல்ல. இதற்கு வேறொரு தன்மையும், காரணமும் உண்டு.
 
'காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது'
என்னும் குறள் ஒன்று உண்டு. அதைப்போல அப்படி உதவி செய்தவர்களுக்கு திருப்பி 'நன்றிக்கடன் செலுத்துதல்' என்னும் விழுமியமும் நம் சமூகத்தில் போற்றத்தக்கது. எப்போது என்னுடைய கல்விக்காக நான் கேட்காமலேயே உதவிகள் என்னைத் தேடி வந்ததோ, அப்போதிருந்து அதன் பொருளை நன்கு உள்வாங்கியிருக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரையில் எந்த நோக்கத்திற்காக எனக்கு உதவிகள் தரப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைந்து காட்டுவதுதான் நான் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் என்று நம்புகிறேன். தனக்கு உகநத்ததாக காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக சாமிக்கு நேர்ந்து கொண்டு, தானாக நிறைவேறும் என்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் பலனை எதிர்பார்க்கும் பக்தனைப் போல இருக்கக் கூடாது. தான் வகுத்துக் கொண்ட இலக்கை அடைவதில் தீவிரம் காட்ட வேண்டும். நான் ஐ ஏ எஸ் அதிகாரியாக வேண்டும் என்னும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவ்வாறான தீவிரத்தையும், கடும் உழைப்பையும் செலுத்த என்றும் தவறியதில்லை. அந்த லட்சிய வேட்கையும், நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்னும் உந்துதலும் தந்த பதற்றமே இந்த நேரத்தில் என்னில் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. இதைத்தான் 'இதற்கு வேறொரு தன்மையும், காரணமும் உண்டு' என்றேன். 

அவ்வுணர்வோடு பாயை விட்டு எழுந்து பக்கத்தில் இருந்த சேரில் உட்கார்ந்தேன். சிறிது நேரம் எந்த நினைவுகளுமன்றி மனதை வெறுமையாய் ஆக்கிக் கொண்டேன். எந்த உணர்வுகளுக்குள்ளும் சிக்காமல் அப்படியே இருந்து விட்டால் நன்றாகத்தானிருக்கிறது. வெறுமையாக இருப்பது எவ்வளவு சுகமானது என்று எனக்குத் தெரியும். பொருளாதாரச் சிக்கல்களால் மனம் தனக்குள்ளேயே யாரும் அறியாமல் வெம்பி வெதும்பும் போது, அதிலிருந்து விடுபட்டு உணர்வுகளற்ற நிலைக்குத் தாவுகிற வித்தையை எங்கு கற்றேன் என்று தெரியவில்லை. மனிதனை அவன் வாழுகிற காலமும், சமூகச் சூழலும் வார்த்தெடுக்கிறது என்பது உண்மையே. என்னுடைய வாழ்க்கைச் சூழல் 'வெறுமைக்குத் தாவுதல்' எனும் கலையை கற்றுக் கொடுத்திருக்கலாம். அப்படி ஒரு சமமான, வெறுமையான மனநிலையில் சில நொடிகளுக்கு மேல் இருக்க முடிவதில்லை. ஆனால், அந்த நொடிப் பொழுதுகள் என் வாழ்க்கைக் காலம் முழுவதும் எத்தனை பெரிய துன்பங்களையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து செல்வதற்கான ஊக்கத்தைத் தரக் கூடியது. அரசு அலுவலகங்களில் தேங்கி, நிரம்பி வழியும் கோப்புகளைப் போல என் மனதில் ஒன்றன் மீது ஒன்றாக சேர்ந்து தேங்கிக் கிடக்கும் அத்தனைக் கவலைகளையும், சோர்வுகளையும் அந்த வெறுமையான மனநிலை நொடிப் பொழுதுகளில் அழித்து விடும் மாயம்தான் என்ன! மணலில் எழுதி வைத்ததை அதன் சுவடுகளே தெரியாமல் அழித்து விட்டுச் செல்லும் கடலலையைப் போல வந்து அழித்து விட்டுச் சென்றது. ஆனால் இந்த நிலை எப்போதும் வாய்ப்பதில்லை. பாலைவனத்தில் பெய்யும் மழையைப் போல எப்போதாவது வந்து, மனதில் படிந்து உறைந்து கிடக்கும் ரணங்களின் சூட்டைத் தணித்து விட்டுச் செல்லும். எனக்கு நினைவு தெரிந்து இரண்டு மூன்று முறை இப்படி உணர்ந்திருக்கிறேன்.

ஆனால் இந்த நாளில், இந்த நேரத்தில், இந்த நிமிடத்தில், இந்த நொடிப்பொழுதில் நான் உணர்ந்த 'வெறுமை' என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. சில நொடிப்பொழுதுகள் தங்கியிருந்த அந்த குறிப்பிட்ட 'வெறுமை மனநிலை' அடுத்த சில நொடிப்பொழுதுகளில் என் காதுகளுக்கு வந்து சேரப் போகும் செய்தியால் இன்றைக்கு முக்கியமாகப் படுகிறது.
'
என்ன வீரபாண்டியன், ரிசல்ட் பாக்கப் போகலாம்ல' என்று சிவநாதன் சொன்ன போது, மீண்டும் மின்சாரம் பாய்ச்சிய உடல் சேரில் உட்கார்ந்திருந்ததை உணர்ந்தேன். முகத்தைக் கழுவி விட்டு 'synergy institute'க்குப் போகலாம் என நினைத்துக் கொண்டே குளியலறைக்குள் சென்றேன். இந்த உடலில் தண்ணீர் பட்டும் ஏதும் ஆகவில்லை. வழிந்த தண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த பொழுது, என் செல்போனில் மணி அடித்தது. மெதுவாகப் போய் எடுத்தேன். நண்பர் பி.பி.டி ரமேசின் எண்ணைப் பார்த்தப் பிறகு செல்போனைக் காதில் வைத்தேன்.
'
வணக்கம் சார்!'
'
என்ன வீரபாண்டியன் ரிசல்ட் பாத்திங்களா?'
'
இன்னும் பாக்கலை சார்'
'
அட என்னது... வாழ்த்துக்கள் வீரபாண்டியன்... நீங்க க்ளியர் பண்ணிட்டீங்க. வாழ்த்துக்கள்... '
'
சார் நெசமாத்தான் சொல்றீங்களா?' ரமேசின் வார்த்தைகள் நீண்ட காலம் ஒருதலைப் பட்சமாக உருகி உருகிக் காதலிக்கும் காதலனிடம் தான் ஏங்கித் தவிக்கும் காதலியே நேரில் வந்து தன்னுடைய காதலைச் சொல்லியது போல இருந்தது . இந்த கணம் கூட அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு என் செவிகளில் மிகத் தெளிவாக எதிரொலிக்கிறது. அவருடைய தெளிவான வார்த்தைகள் என் உடலை, உள்ளத்தை, சிந்தனையை ஒரு புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு உள்ளிழுத்துச் சென்று சில நொடிப்பொழுதுகளைத் தெளிவற்றதாக மாற்றிப் போட்டது.
'
அட உண்மையிலேயே வீரபாண்டியன். சிபியும் க்ளியர் பண்ணிட்டான்'
'
ரொம்ப நன்றி சார். நானும் ரிசல்ட் பாக்கத்தான் கெளம்பிக்கிட்டு இருக்கேன். ரொம்ப நன்றி சார்'
முகம் முழுக்க மகிழ்ச்சியில் நிறைந்த படி வந்த அறைத் தோழர்கள் பிரபுவும், சிவநாதனும் 'என்ன வீரபாண்டியன், க்ளியர் ஆயிடுச்சா?' எனக் கேட்டனர்.


'ஆங்... க்ளியர் ஆயிடுச்சாம் பிரபு' சொன்ன மறுநொடி எங்கள் உடல் ஒன்றோடொன்று தழுவிக் கொண்டது. மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்கு சரியான உடல்மொழி அதுவாகத்தானிருக்க முடியும். சிவாவோடும் அதே தழுவல். அதே பரிமாற்றம்.
'என்ன ரேங்க் வீரபாண்டியன்' இது சிவா.
'அத கேக்கல சிவா. ரிசல்ட் வந்துருச்சுன்னு மட்டும்தான் சொன்னார். ரேங்க் எதுவும் சொல்லல. நானே போய் பாத்துட்டு வந்துடுறேன்'
'சீக்கிரம் போயிட்டு வாங்க... ட்ரீட்ட ஆரம்பிச்சுடலாம்'
நடந்து கொண்டிருந்த போது
சிபியிடம் இருந்து அழைப்பு மணி வந்தது.
'என்னப்பா தம்பி. ரிசல்ட் பாத்தியா?'
'அதுக்குத்தான்ப்பா போய்கிட்டு இருக்கேன். ஆமா, ஒன்னோட ரேங்க் என்ன'
'என்னோட ரேங்க் விடு. ஒன்னோட ரேங்க் என்ன தெரியுமா?'
'இன்னும் தெரியலப்பா. அதப் பாக்கத்தான்
போய்கிட்டு இருக்கேன்'
' உறுதியா ஐ ஏ எஸ் தான். 53 வது ரேங்க்பா நீ. தம்பி சொன்ன மாதிரியே 'ஹோம் காடர்' ஐ ஏ எஸ் வாங்கிட்டியேப்பா' .



ஹெர்குலஸ் தான் பன்னெடுங்காலமாக சுமந்து வந்த பூமி உருண்டையைக் கீழே போட்டு விட்டு நிரந்தரமான ஓய்வு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அப்பூமி உருண்டையை எட்டி உதைத்து விளையாடியதைப் போல் என் மனம் விளையாட ஆரம்பித்தது. ஏழு கடல் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி குகைக்குள் நுழைந்து கூண்டுக்குள் இருந்த கிளியைப் பிடித்து, அதை ரத்தம் சிந்த வைத்து கொடூரமான அரக்கனைக் கொன்று, அவன் பிடியில் இருந்த மக்களை விடுதலை செய்த ஒரு மாவீரன் விட்ட நிம்மதிப் பெருமூச்சை ஒத்திருந்தது என் அந்த கணத்து மூச்சுக் காற்று.

இருநூறு அடி தாண்டியிருப்பேன். என்னைக் கேட்டால் இந்த இருநூறு அடி நடைக்குள் மனதில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் முக்கியம் என்பேன். சாலைகளில் என்னைக் கடந்து செல்லும் வாகனங்கள் எப்போதும் போலவே ஹார்ன் ஒலி எழுப்பி என்னைக் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. ஒரு வெற்றித் திருமகன் வருகிறான் என்று எவரும் பாடல் படவில்லை. என் உருவத்தை தன் கண் பாவைக்குள் பதித்துக் கொண்டாலும் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நகர்ந்து கொண்டே சென்றனர் மனிதர்கள். வேகத்தில் இடிப்பதைப் போல சென்ற என்னைத் திட்டி விட்டுப் போயினர் இருவர். ஒரு யுகக் கனவை நனவாக்கிய நாயகன் நடந்து வருகிறான் என்று எவரும் வழியெங்கும் பூ தூவவில்லை. ஹெர்குலஸ் எட்டி உதைத்து விளையாடிய பூமி உருண்டை திடீரென மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது. அதில் சாதாரண மிகச் சிறு மனிதப் பூச்சி நான் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. அரக்கனைக் கொன்ற மாவீரனைப் போன்ற பெருமூச்சின் வெப்பமும், அடர்த்தியும், வேகமும் குறைந்து விட்டது. சிந்துபாத்தின் கண் முன் விரிந்து கொண்டே செல்லும் முடிவற்ற தொடர்கதையைப் போல, என் கண்களுக்கு இந்த உலகம் தென்பட்டது.